Saturday 27 September 2014

தொடக்கப் பள்ளியில் சேரும்போதே ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக படிக்கிறேன் என்ற எண்ணம் வர வேண்டும்

தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் சேரும்போதே, நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக படிக்கிறேன் என்ற எண்ணம் வேண்டும். இதனை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று தமிழக காவல் தலைவர் கே.சொக்கலிங்கம் கூறினார்.

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. துறை சார்பில் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட சிவல் துறைத் தேர்வுகளுக்கான பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது. பயிற்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து காவல் துறைத் தலைவர் சொக்கலிங்கம் பேசுகையில் கூறியதாவது: முதலாம் வகுப்பில் பள்ளியில் சேரும்போதே ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக படிக்கிறேன் என்ற எண்ணம் குழந்தைகளிடம் வர வேண்டும். இதனை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் இதுபோன்ற பயிற்சிகளை தொடக்கப் பள்ளியில் 1-முதல் 5 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்று 26 உயர் பதவிகள் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும், உற்றார் உறவினர் போற்றும் வகையில் உள்ளன. ஆனால் அனைத்திற்கும் ஒரே தேர்வு முறைதான். அதில் பெறும் மதிப்பெண் தகுதிகளைப் பொறுத்து அந்ததந்தப் பதவிகள் கிடைக்கும். 

மாணவர்கள் சி.பி.எஸ்.இ., மற்றும் என்.சி.ஆர்.டி. பாடதிட்டத்தின் கீழ் படித்தால்தான் ஐ.ஏ.எஸ். தேர்வில் நுழைவது எளிது. மாணவர்களிடம் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சக்திகளும் உள்ளன. அதனை வெளிக்கொணர்ந்தால் திறமைகள் வெளிப்படும். இதற்கு தடங்கல், இடையூறு, சோதனை, வேதனைகள் வரும். அதையும் தாண்டி வெளிக்கொணர்ந்து மற்றவர்களுக்கும், உற்றார்க்கும் வழிகாட்டியாக இருக்க முடியும் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்கள்தான் எதிர்காலச் சிற்பிகள். மாணவர் சக்திதான் மகத்தான சக்தி. ஐ.ஏ.எஸ். போன்ற உயர் பதவியால் தாய் பெறும் மகிழ்ச்சி, உற்றார் பெறும் மகிழ்ச்சி எல்லையற்றது. கருமமே கண்ணாயினார் என்று ஒரே குறிக்கோளுடன் இருந்தால்தான் வெற்றியடைய முடியும் என்றார் அவர்.  

No comments:

Post a Comment