Friday 19 September 2014

திருவாரூர் நாலுகால் மண்டபம் பகுதியில் 5 குடிசைகள் தீயில் எரிந்து நாசம்

திருவாரூரில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் தீக்கிரையாகின.

திருவாரூர் நாலுகால் மண்டபத்தில் வசித்து வருபவர் தொழிலாளி சீனுவாசன் (55). இவர் வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டார். பிற்பகல் 1 மணியவில் இவரது குடிசை வீடு எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. இந்தத் தீ அருகில் இருந்த முரளி, ரெங்கராஜலு, மாரிமுத்து, பொய்யாமொழி ஆகியோரது குடிசை வீடுகளிலும் பரவி தீக்கிரையானது. இந்த விபத்தில் முரளி வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அருகிலுள்ள நடராஜன், பாலு ஆகிய இருவரது வீடுகள் மற்றும் தென்னை மரம் ஆகியவை தீப்பிடித்தது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

இதுகுறித்து திருவாரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலையத்திலிருந்த 2 வாகனங்களில் ஒரு வாகனம் முற்றிலும் பழுதடைந்து பயன்பாடுன்றி உள்ளது. மற்றொரு வாகனம் டீசல் டேங்க் பழுது போன்ற காரணங்களால் பழுது பார்க்க அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதனால் தீயணைப்பு நிலையத்தில் உரிய வாகனமின்றி சிறிய தொட்டி பொருத்தப்பட்ட வாகனம் சம்பவ இடத்துக்கு காலதாமதமாக வந்தது. அதனைத் தொடர்ந்து நன்னிலம், குடவாசல் தீயணைப்பு நிலைய வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீ அணைக்கப்பட்டது. திருவாரூர் நகரப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment