Saturday 8 October 2016

பெற்றோரிடம் இருந்து பிரிக்க முயலும் மனைவியை விவாகரத்து செய்யலாம்: உச்ச நீதிமன்றம்

பெற்றோரிடம் இருந்து தன்னைப் பிரிக்க முயலும் மனைவியை விவாகரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெற்றோரிடம் இருந்து பிரிந்து தனிக்குடித்தனத்துக்கு மனைவி வற்புறுத்துவதாக பெங்களூரு குடும்ப நீதிமன்றத்தில், கணவர் விவாகரத்து கோரியதன்பேரில் அத்தம்பதிக்கு 2001-ஆம் ஆண்டில் அந்நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

இதனை எதிர்த்து மனைவி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை அடுத்து, குடும்ப நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் கணவர் மேல்முறையீடு செய்தார்.

அந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனில் ஆர். தவே மற்றும் எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

பெற்றோரால் வளர்க்கப்பட்டு, கல்வி பெறப்பட்ட மகனுக்கு, திருமணத்துக்குப் பிறகும், அவர்களை பேணிக் காப்பதற்கு தார்மிக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கடமை உள்ளது. இது ஹிந்து மத தர்மமும்கூட. மேலும் பொருளாதார ரீதியாக மகனைச் சார்ந்திருக்கும் பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிக்குடித்தனம் செய்ய மனைவி அழைப்பதை எந்த மகனாலும் பொறுத்துக் கொள்ள முடியாது.

அவ்வாறு வலுக்கட்டாயமாக பிரிக்க முயலுவது கணவனுக்கு பெரும் தொந்தரவாகவே இருக்கும். மேலும் வாழ்க்கையில் நிம்மதியும் கிடைக்காது. எங்களைப் பொருத்தவரை, கீழமை நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு சரியே.

இந்த வழக்கில் பெற்றோரிடம் இருந்து பிரிந்து செல்வதற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்கள் ஏதும் இல்லை என்பதாலும், மகன் என்ற ரீதியிலான கடமையை செய்வதிலிருந்து விலக கட்டாயப்படுத்துவதாலும் மனுதாரர் தன் மனைவியை விவாகரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டு என்று தீர்ப்பளித்தனர்.

No comments:

Post a Comment