Monday 17 October 2016

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, தமிழ்நாட்டில் இன்று ரெயில் மறியல் போராட்டம்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

காவிரி மேலாண்மை வாரியம்


அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ந் தேதிக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், அக்டோபர் 3-ந் தேதி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று தெரிவித்ததுடன், பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும் என்றும் கூறி இருந்தது.

எதிர்ப்பு


மத்திய அரசு இப்படி திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் தற்போது 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில், கர்நாடக அரசு உரிய அளவில் தண்ணீர் திறந்துவிடாததால் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.

எனவே, காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பி வருகின்றன. ஆங்காங்கே போராட்டங்களும் நடந்து வருகின்றன.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு


இந்த நிலையில், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, கடந்த 6-ந் தேதி சென்னையில் தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக் கத்தினர் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் அக்டோபர் 17 (இன்று), 18-ந் தேதிகளில் (நாளை) தொடர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விவசாய சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. தி.மு.க., காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், ம.தி.மு.க., தே.மு.தி.க., மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், புதிய தமிழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை ரெயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்து உள்ளன.

200 இடங்களில் ரெயில் மறியல்


அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட தலைநகரங்கள், முக்கிய நகரங்கள் என மொத்தம் 200 இடங்களில் இந்த ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்கின்றனர். இதில், ஏதாவது ஒரு இடத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினும் கலந்துகொள்வார் என தெரிகிறது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை சென்டிரலில் இன்றும், எழும்பூரில் நாளையும் நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொள்கிறார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சாவூரில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொள்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை பேசின்பிரிட்ஜில் நாளை நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் பங்குகொள்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களான தா.பாண்டியன் தென்சென்னையிலும், இரா.முத்தரசன் திருவாரூரிலும் இன்று ரெயில் மறியலில் ஈடுபடுகிறார்கள்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு


தொடர்ந்து, 48 மணி நேரம் இந்த ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்பதால், ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. என்றாலும், ரெயில் போக்குவரத்தை வழக்கம் போல் நடத்த ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை சென்டிரல், எழும்பூர் உள்பட தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போராட்டக்காரர்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

No comments:

Post a Comment