Sunday 2 October 2016

முதல்வர் உடல் நலன் தேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது: ஆளுநர்

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலன் தேறி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அறிய அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சனிக்கிழமை இரவு 6.45 மணிக்கு நேரில் சென்றார்.
இரவு 7.15 மணி வரை, அதாவது சுமார் 30 நிமிஷங்கள் அவர் மருத்துவமனையில் இருந்து முதல்வருக்கான சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
இது தொடர்பாக, ஆளுநர் மாளிகை சனிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை: முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், சனிக்கிழமை நேரில் சென்றார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆளுநரிடம் மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி எடுத்துரைத்தார்.
பின்னர் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அறைக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்று பார்வையிட்டார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருவதற்காக மருத்துவர்களுக்கு ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலன் தேறி வருவது கண்டு தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகச் சிறப்பான முறையில் மருத்துவ சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு பாராட்டுதல்களையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
முதல்வர் விரைவில் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், பழக்கூடையையும் ஆளுநர் அளித்தார்.
மக்களவை துணைத் தலைவர் எம்.தம்பிதுரை, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சுகாதாரம்-குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆளுநரை வரவேற்றனர்.

No comments:

Post a Comment