Sunday 18 September 2016

உஷார்! கலப்படம்...



உணவுப் பொருள்களில் உள்ள கலப்படத்தை கண்டறிய சில எளிய வழிகள்:
வெல்லம் 
வெல்லத்தின் மேல் பகுதியில் வெள்ளை வெள்ளையாக மாவு போன்று படிந்து  இளம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது ரசாயனத்தால் பிளீச் செய்யப்பட்டது.
பால் 
ஒரு தட்டை சாய்வாக  வைத்து அதில் அரை தேக்கரண்டி பாலைவிட்டால் சுத்தமான பாலாக இருந்தால் லேசாக நகரும் அல்லது அப்படியே நிற்கும். கலப்படப் பாலாக இருந்தால் வேகமாக கீழே ஓடி விடும்.
தேயிலை
தேயிலையை  ஈரமான டிஷ்யூ பேப்பரில் சிறிதளவு தூவினால் செயற்கை நிறம் தானாகப் பிரிந்துவிடும்.
சர்க்கரை 
சர்க்கரையை ஒரு கண்ணாடி டம்ளர் நீரில் கரைத்தால் அதில் கலந்துள்ள சாக்கட்டி தூள் மற்றும் ரவை இரண்டும் மேலே மிதக்கும்.
ஜவ்வரிசி 
ஜவ்வரிசியை 10 நிமிட நேரம் நீரில் ஊற வைத்து பிறகு முகர்ந்துப் பார்த்தால் பிளீச்சிங் வாசனை வரும்.
தானியங்கள் 
தானியங்களை உப்பு நீரில் போட்டால் அதில் கலந்துள்ள காளான் விதைகள் மிதக்கும். தானியம் அடியில் தங்கும்.
கோதுமை மாவு 
இது சற்று வெண்மை நிறமாகவும் அதிக நீர்விட்டுப் பிசையும் படியும் இருந்தால் அது கலப்பட கோதுமை மாவு.  இதில் செய்த சப்பாத்தி சுவையற்று கெட்டியாக இருக்கும்.
ஒரிஜினல் தேன் 
ஒரிஜினல் தேனை கண்டுபிடிக்க சுத்தமானப் பருத்தி துணியில் தேனை நனைத்து தீக்குச்சிப் பற்ற வைத்து அதில் காட்டினால் தீப்பிடித்து நன்றாக எரிந்தால் அது சுத்தத் தேன். கலப்பட தேன் என்றால் தீப்பட்டதும் அந்தத் துணி உடனே கருகிவிடும்.
காபித் தூள் 
ஒரு டம்ளர் நீரில் இலேசாக காப்பித்தூளைத் தூவினால் காப்பித்தூள் தண்ணீரின் மேல் மிதக்கும். ஆனால் அதில் கலந்துள்ள சிக்ரி சில விநாடிகளில் மூழ்கிவிடும். சிக்ரியில் அதிக அளவு கரு வெல்ல சாயம் இருப்பதால் ஒரு வித நிறத் தொடர்ச்சி காணப்படும்.
சாதாரண உப்பு 
சாதாரண உப்பில் வெள்ளை கல்லின் தூள் மற்றும் சாக்கட்டி போன்றவைகள் கலக்கப்படுகின்றன. இவைகளைக் கண்டுபிடிக்க ஒரு டம்ளர் நீரில் ஒரு தேக்கரண்டி சாதாரண உப்புத்தூளை கலக்கவும். சாக்கட்டி கலந்திருந்தால் அந்த நீர் வெள்ளை நிறமாவதோடு மற்ற அசுத்தமானப் பொருள்கள் கீழே தங்கிவிடும்.

No comments:

Post a Comment