Saturday 3 September 2016

குற்றங்களை விரைந்து தடுக்க "ஹலோ போலீஸ்': எஸ்.பி. தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் குற்றங்களை விரைந்து தடுக்கும் வகையில் "ஹலோ போலீஸ்' தொடங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம்.மயில்வாகணன் தெரிவித்தார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது: மாவட்டத்தில் நிகழும் குற்றங்களை தடுக்கவும், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் ஹலோ போலீஸ் தொடங்கப்பட்டு 8300087700 என்ற தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆங்காங்கே நிகழும் குற்றங்கள் குறித்து தகவல் தெரிவி க்கலாம். தகவல் கொடுப்பவர் குறித்த ரகசியம் காக்கப்படும்.
ஏதேனும் ஒரு நிகழ்வில் பாதிக்கப்படுபவர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் குற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். குற்றத்தகவல் கிடைத்தவுடன் அந்தந்த பகுதி காவல் நிலையங்கள் மற்றும் இருசக்கர ரோந்துப்பணி காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஹலோ போலீஸ் மூலம் வரும் தகவல்கள் குறித்து நாள்தோறும் எனது கவனத்துக்கு வந்தவுடன் அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாவட்டத்திலுள்ள 5 துணைக் காவல் கண்காணிப்பு பகுதிகளில் செயின் பறிப்பு, கத்தியைக் காட்டி பணம் பறிக்கும் கும்பலை கண்டுபிடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 17 வயதுக்கு கீழ் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முத்துப்பேட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலப் பாதுகாப்பில் 8 மாவட்டத்திலிருந்து சுமார் 2,000 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர் என்றார் மயில்வாகணன்.
பேட்டியின்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அப்துல்லா, திருவாரூர் டிஎஸ்பி வீ.சுகுமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment