Friday 3 February 2017

திருவாரூர் - விளை நிலத்தில் கச்சா எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்

கச்சா எண்ணெய் குழாய்

திருவாரூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியை 30 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்டு வருகிறது. பூமிக்கு அடியில் கச்சா எண்ணெய் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. குழாய்களில் ஏற்படும் கசிவினால் கச்சா எண்ணெய் வெளியேறி விளை நிலத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை விட்டு வெளியேற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த நிறுவனம் கச்சா எண்ணெய் எடுப்பதற்காக மேற்கொள்ளும் புதிய பணிகளையும் தடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள ஆண்டிபாளையத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் விளை நிலத்தில் கச்சா எண்ணெய் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது.

பணிகள் தடுத்து நிறுத்தம்

இதை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே மணலால் சாலை அமைத்து விளைநிலங்களில் கச்சா எண்ணெய் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் குழாய் பதிக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி, பணிக்காக பயன்படுத்தப்பட்ட பொக்லின் எந்திரத்தை சிறைபிடித்தனர். இதனால் ஓ.என்.ஜி.சி. பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment