Wednesday 15 February 2017

நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதாலும், காவிரி நீர் சரிவர கிடைக்காததாலும் ஆறு, வாய்க்கால், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் வறண்டு போனது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நீர்நிலைகள் வறண்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகின்றது. இதனால் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் அளவில் சராசரியாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 8 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்து இருந்தது. ஆனால் தற்போது ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் 15 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. திருவாரூரில் அமைந்துள்ள கமலாலயம் குளம் நகரத்தை சுற்றி நிலத்தடி நீரை பாதுகாத்து வந்தது.

ஆறுகளில் தண்ணீர்் இல்லாததால் குளத்திற்கு தண்ணீர் பாசனம் செல்வது தடைப்பட்டது. இதனால் தற்போது இந்த குளம் எந்த ஆண்டும் இல்லாத அளவில் தண்ணீர் வற்றி தரையை தொடுகின்ற அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நகர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இதன் காரணமாக திருவாரூர் நகர் பகுதியில் 40 அடியில் கிடைத்து வந்த நிலத்தடி நீர் கிடு, கிடுவென குறைந்ததால் பல வீடுகளில் ஆழ்குழாய் மோட்டார்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டது. இதனால் அனைத்து ஆழ் குழாய்கள் மீண்டும் 100 அடிக்கு மேல் ஆழப்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல் நகராட்சி நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்படும் ஆழ்குழாய் மின் மோட்டார்களின் செயல்பாடு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு

திருவாரூர் மாவட்டத்தின் முக்கிய ஏரிகளான வடுவூர் ஏரி, உதயமார்த்தண்டபுரம் ஏரி ஆகியவை பராமரிப்பில்லாததால் வறண்டு காணப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான குளங்கள், ஏரிகள், நீர்்நிலைகளும் ஆக்கிரமிப்பு செய்து அழிக்கப்பட்டு விட்டது. நிலத்தடி நீரின் பெரும் பகுதியை கருவேல மரங்கள் எடுத்துக்கொள்கின்றது. இதனால் ஆண்டுக்கு ஆண்டு நிலத்தடி நீரின் அளவும் குறைவதற்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.

மாவட்டத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளான முத்துப்பேட்டை, பெருகவாழ்ந்தான் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் கடல்நீர் உட்புகுவது அதிகமாகிவிட்டது. இதனால் நிலத்தடி நீர் வெகுவாக உப்பாக மாறி வருவதால் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீர் பிரச்சினையால் கோடை காலத்தில் மிகப்பெரிய வறட்சியால் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே தமிழக அரசு நிலத்தடி நீரை பாதுகாத்து குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தி பெரும் திட்டங்களை செயல்படுத்திட வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள குளம், குட்டை நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

நீர் நிலைகளை முழுமையாக தூர்வாரி தண்ணீரை சேமிக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுபாட்டை போக்கிட முடியும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment