Sunday 5 February 2017

3 முறை முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழக முதல்-அமைச்சராக வரும் 7 அல்லது 9-ம் தேதியில் அவர் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார். சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து ஒ.பன்னீர் செல்வம்  தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்தார். 

கடந்த 2001ஆம் ஆண்டு, டான்சி வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவியில் தொடர முடியாத போது, ஓ.பன்னீர்செல்வம் முதன் முறையாக தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.  2001 செப்டம்பர் 21 முதல் 2002 மார்ச் ஒன்றாம் தேதி வரை பணியாற்றினார்.  இரண்டாவது முறையாக  கடந்த 2014ஆம் ஆண்டு, சொத்து குவிப்பு வழக்கில்  ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது , ஓ.பன்னீர்செல்வம் 2014 செப்டம்பர் 29 முதல் 2015 மே 22 வரை முதல்-அமைச்சராக பதவி வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5–ந்தேதி மரணமடைந்தார். அதையடுத்து, கடந்த 2016 டிசம்பர் 6ஆம் தேதி 3-வது முறையாக முதல்-அமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் ஒ.பன்னீர் செல்வம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து உள்ளார்.

No comments:

Post a Comment