Sunday 19 February 2017

சமூக பணியாக நினைத்து சீமைக்கருவேல மரங்களை அகற்ற அனைவரும் முன்வரவேண்டும்

திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சீனிவாசன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் நீரை உறிஞ்சுகிறது. இதனால் விவசாயம் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. மதுரை கிளை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மாநிலம் முழுவதும் அனைத்து இடங் களிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம். அதிக மகசூல் கொடுக்கும் தன்மையுடைய மண்வளம் பெற்றது. எனவே நிலத்தடி நீரை சேமித்து விவசாயத்தை பாதுகாத்திட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் இடங்களிலுள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். இப்பணியை சுமையாக கருதாமல் சமூக பணியாக நினைத்து செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அறிக்கை அனுப்ப வேண்டும்

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கூறுகையில், மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அரசு அலுவலர்கள் உடனடியாக தங்களது பகுதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு விரைந்து அறிக்கை அனுப்ப வேண்டும். தனியார் இடத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அதன் உரிமையாளர்கள் உடனடியாக அகற்றி கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் அந்த மரங்களை அகற்றும். அகற்ற ஏற்படும் செலவு இரு மடங்காக நிலத்தின் உரிமையாளரிடம் வசூலிக்கப்படும் என கூறினார்.

இதில் தலைமை குற்றவியல் நீதிபதி சத்தியமூர்த்தி, மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், உதவி கலெக்டர் முத்துமீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment