Sunday 5 January 2014

Muthupettei - இன்று உலகப் பறவைகள் தினம்: பறவைகளைப் பாதுகாப்போம்

இயற்கை வளம், காடுகள் அழிக்கப்படுதல் உள்ளிட்ட மனிதச் செயல்களால் பல்வேறு பறவையினங்கள் வேகமாக அழிந்துவருவதாக பறவை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பறவைகளைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 5-ஆம் தேதி உலக பறவைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பறவைகளைப் பாதுகாப்பது, வளர்ப்பது, வளர்ப்போருக்கு உரிய ஆலோசனைகள் வழங்குதல் ஆகியன இத் தினத்தில் முக்கியமாகப் பின்பற்றப்படுகிறது.

சங்ககால இலங்கியங்கள் தொடங்கி இன்றைய புறா பந்தயங்கள் வரை பறவைகள் மனிதர்களோடு இரண்டற கலந்துவிட்ட ஒரு ஜீவன். வனப்பரப்பில் இந்திய மாநிலங்களில் தமிழகம் 22,877 சதுர கி.மீ. தொலைவைக் கொண்டுள்ளது. இங்குள்ள வனப் பகுதிகளில் கழுகு, பருந்து, மயில், ஆந்தை, புறா, மரங்கொத்தி, குயில், பாம்புதாரா, கொண்டலாத்தி, தேன்சிட்டு, அரிவாள் மூக்கன், கொக்கு, நாரைகள் உள்ளிட்ட 350 பறவையினங்கள் வாழ்ந்துவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், செல்போன் கோபுரங்கள் வருகையால் சிட்டுக்குருவி இனங்கள் அழிவுப்பாதைக்குச் சென்றதுபோல இயற்கைக்கு எதிரான பல்வேறு இடையூறுகளால் உலக அளவில் 200 வகையான பறவைகளும், இந்திய அளவில் 15 வகையான பறவைகளும் அழிவின் பிடியில் உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.நாடு முழுவதும் உள்ள வன உயிரின சரணாலயங்களால் பெருமளவு அந்நியச் செலாவணி ஈட்டப்படுகிறது.

இவற்றைக் காண வெளிநாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை பழவேற்காடு, வெள்ளோடு, கரைவெட்டி, உதயமார்த்தாண்டபுரம், வடுவூர், சித்திரன்குடி, கூந்தங்குளம், கஞ்சிரன்குளம், வேட்டன்குடி, வேடந்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.

இருப்பினும், நீர்நிலைகள் குறைந்துபோதல், மரங்கள் அழிக்கப்படுதல், வேட்டையாடப்படுதல் போன்ற பல காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. மக்கள் வசிப்பிடங்களில் மரங்கள் முற்றிலும் அழிக்கப்படுவதன் காரணமாக, குருவிகள், கிளிகள், மைனா, குயில் என நம் கண் முன் பார்த்து ரசித்த பறவைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது கண்கூடு.இதுகுறித்து பறவைகள் ஆர்வலரான லீபுரம் பகுதியைச் சேர்ந்த த.கோவிவிநாஸ்குமார் கூறியதாவது: ஒருசில பறவைகள் மரங்களில் கூடுகட்டி வாழ்வதைவிட வீடுகளின் முன்பு உள்ள மரங்களில் கூடு கட்டி வாழ்வதையே பெரிதும் விரும்புகின்றன. இது போன்ற பறவைகளுக்கு வீட்டின் கொல்லைப்புறத்திலோ, மாடியிலோ சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்தால் தாகத்தைப் போக்கிக்கொள்ளும். இதன்மூலம் மனதளவில் நாம் மகிழ்ச்சிப் பெறலாம்.

நாட்டின் தேசியப் பறவையாக மயிலையும், மாநிலப் பறவையாக புறாவையும் கொண்டாடும் நாம் பறவைகளைப் பாதுகாப்பதில் போதுமான கவனம் செலுத்துவது இல்லை. வனப்பகுதிகளில் வாழும் பறவை இனங்கள் வேட்டையாடப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நமது வசிப்பிடங்களிலேயே பறவைகள் வாழ்வதற்கான சூழலை மனமுவந்து ஏற்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே இயற்கையை அனுபவித்து வாழ்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மிகவும் அவசியம் என்றார் அவர்.

வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தை முதன்முதலில் இயற்றிய நாடு என்கிற பெருமை நமக்கு உண்டு. 1887-ல் இச்சட்டம் உருவாக்கப்பட்டது. பறவைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்திய பறவைகள் பாதுகாப்பு இயக்கம் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும்; பறவைகள் வாழும் முக்கியப் பகுதிகளை ஆராய்ந்து அவற்றைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; எல்லாவற்றையும்விட, சுற்றுச்சூழல் சமநிலைத் தன்மையில் பறவைகளின் பங்கு முக்கியமானது; அவற்றின் இருப்புகுறித்த முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பது பறவை ஆர்வலர்களின் விருப்பம்.




திருவாரூர் மாவட்டத்தில் முத்துபேட்டைஅலையாத்தி காடுகள்,  நாச்சிகுளம் - உதயமார்த்தாண்டபுரம், மன்னார்குடி அருகே வடுவூர் ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயம் உள்ளன .அக்டோபர் முதல் பிப்ரவரி வரை உள்ள காலங்களில் சென்று பார்க்கலாம் .


No comments:

Post a Comment