Saturday 24 February 2018

ரெயில்வே மேம்பால பணிகள் மீண்டும் தொடங்கப்படுமா

நிதி ஒதுக்கிய பின்னரும் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் இதற்கு விடிவு காலம் எப்போது? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் தாலுகா தலைநகரம் ஆகும். இங்கு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறை அலுவலகங்கள், நீதிமன்றங்கள் அமைந்து உள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளும் உள்ளன. நூற்றுக்கணக்கான சிறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. நீடாமங்கலம் நகரில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் ஆகிய ஊர்களுக்கு சென்று வருகின்றன.

இதேபோல் அதிராம்பட்டினம், வேதாரண்யம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் இருந்து நீடாமங்கலம் வழியாக கும்பகோணம், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, புதுச்சேரி, திருப்பதி ஆகிய ஊர்களுக்கும் தினமும் ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இவை தவிர தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளும், மோட்டார் சைக்கிள்களும் நீடாமங்கலத்தை கடந்து சென்று வருகின்றன. இதனால் நீடாமங்கலம் தேசிய நெடுஞ்சாலை முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து சாலையாக திகழ்கிறது.

நீடாமங்கலம் ரெயில் நிலையம் வழியாக நாள்தோறும் 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 4 பயணிகள் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. இது தவிர வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இது தவிர தினமும் நிலக்கரி, நெல்மூட்டைகள் என சரக்கு ரெயில்களும் நீடாமங்கலம் வழியாக இயக்கப்படுகின்றன.

இதனால் நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் ஒரு நாளைக்கு 17 முறை மூடப்படுகிறது. இவ்வாறு ரெயில்வே கேட் மூடப்படும் போதெல்லாம் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சாலை விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதனால் திருச்சி, தஞ்சாவூரில் இருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலை பயணிகள் மேலும் காரைக்கால், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர், நீடாமங்கலம் வழியாக தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகள் அன்றாடம் அவதிப்படுவது என்பது பலவருடங்களாக நிகழ்ந்து வருகிறது.

நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்படும் நேரம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 7 மணி நேரம் என்றும் அந்த நேரங்களில் எல்லாம் நெடுஞ்சாலை போக்குவரத்தில் பாதிப்பும், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது என்றும் அதற்காக மாற்று வழியாக புறவழிச்சாலைத்திட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே கோரிக்கை விடப்பட்டு வந்தது.

இதனையடுத்து கடந்த மத்திய அரசின் சார்பில் நீடாமங்கலம் புறவழிச்சாலை திட்டத்திற்கு முதலில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் திருச்சி முதல் நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தினால் புறவழிச்சாலை திட்டம் கைவிடப்பட்டது. நான்கு வழிச்சாலை திட்டமும் திருச்சி முதல் தஞ்சாவூர் வரை நிறைவேற்றப்பட்டது. பின்னர் நிதி பற்றாக்குறை காரணமாக நான்கு வழிச்சாலைத்திட்டம் இருவழி சாலை திட்டமாக அறிவிக்கப்பட்டு அந்த பணியும் பல்வேறு காரணங்களால் தற்போது சரிவர நிறைவேறாமல் பணியில் மந்தம் ஏற்பட்டுள்ளது.

நீடாமங்கலம் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணவும், உள்ளூர் மக்கள் நிம்மதியாக கடை வீதிக்கு சென்று வர வசதியாகவும் இருக்க தமிழக முதல்-அமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா, நீடாமங்கலம் ரெயில்வே மேம்பாலம் திட்டத்திற்காக அரசின் 110-வது விதியின் கீழ் ரூ.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். அதனை தொடர்ந்து தமிழக நெடுஞ்சாலைத்துறையினர் அதற்கான மதிப்பீட்டை தயாரித்து மேம்பாலம் அமைவதற்கான வரை படத்தையும் தயாரித்தனர்.

ரெயில்வே உயரதிகாரிகளும், தமிழக நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களும் வரைபடத்தை கொண்டு ரெயில்வே மேம்பாலம் அமையும் வாய்ப்புள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது மேம்பாலம் அமைய சில காலம் ஆகும் என்பதால் உடனடியாக கீழ்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ரெயில்வே உயரதிகாரி உத்தரவாதம் அளித்தார். இதனையடுத்து மேம்பாலம் அமைக்க மத்திய அரசும் ரூ.44 கோடியே 47 லட்சத்தை ஒதுக்கீடு செய்தது. மேம்பாலம் அமைக்க மண் ஆய்வும் நடத்தப்பட்டது. அதோடு சரி... அதன் பின்னர் எந்த பணிகளுமே நடைபெறவில்லை.

இந்த மேம்பாலம் அமையும் பகுதியில்(ஒரத்தூர் கிராமம்) வேளாண்மை அறிவியல் நிலையம் உள்ளதால் அதற்கான நிலங்கள் பாதிக்கும் என கோவை வேளாண் பல்கலைக்கழகம் மூலம் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டதால் மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

எந்த காரணமாக இருந்தாலும் சரி, நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு காலம் எப்போது? என்பதுதான் பொதுமக்களின் ஒரே கேள்வியாக உள்ளது. போக்குவரத்து நெருக்கடி தீர்வதற்கு ஒரே வழி உடனடியாக மேம்பாலம் அமைத்திடும் பணியை துரிதப்படுத்திட வேண்டும் என்பதுதான் என பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். இருவழிச்சாலை திட்டத்தை துரிதப்படுத்திட வேண்டும்.

அதே நேரத்தில் இந்த இரண்டு பணிகளுக்குமிடையே கீழ்பாலம் அமைக்கும் பணியை தொடங்கிட வேண்டும் என்பது தான் பொதுமக்களின் முக்கியமான கோரிக்கையாகும். நாள்தோறும் அவதிப்படும் பொதுமக்களுக்கு விடிவுகாலத்தை மத்திய. மாநில அரசுகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைளை நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நீடாமங்கலம் ரெயில்வே கேட், தஞ்சை சாலையில், ஒரத்தூர் ரெயில்வே கேட், ஆதனூர் ரெயில்வே கேட், நீடாமங்கலம்-திருவாரூர் சாலையில் வையகளத்தூர், கப்பலுடையான் ரெயில்வே கேட்டுகள் என 5 ரெயில்வே கேட்டுகள் உள்ளன. பயணிகள் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் செல்லும் நேரங்களில் இந்த ரெயில்வே கேட்டுகள் மூடுவதால் ஒவ்வொரு ரெயில்வே கேட்டுகளையும் கடந்து செல்வதற்குள் சாலை மார்க்கமாக செல்பவர்கள், பொதுமக்கள் மிகுந்த அவதிப்படுகிறார்கள். வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு போன்ற வழிபாட்டு ஸ்தலங்களுக்கு கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இதற்கு உடனடி தீர்வு மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment