தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மீது எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச் சங்க தலைவர் கே.சண்முகசுந்தரம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டி கிராமத்தில் உள்ள பெரும்பள்ள ஓடை மாசுபடுவதைத் தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதை நம்பியுள்ள நிலங்களை பாதுகாப்பதற்காகவும் இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச் சங்கத்தை தொடங்கினோம். கீழ்பவானி கால்வாய், நிலவியல் ஓடை ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் பெரும்பள்ள ஓடைக்கு வருகிறது.
ஓடை போன்ற நீர்நிலைகள், விவசாய நிலங்களின் பாசனத்துக்கு நீர் ஆதாரமாக இருப்பதுடன், திடீரென கனமழை பெய்து, வெள்ளம் ஏற்படும்போது மழைநீரைத் தேக்கி வைக்கவும் பயன்படுகின்றன. பாசனத்துக்கு பெரிதும் பயன்படும் பெரும்பள்ள ஓடையில் ஆக்கிரமிப்பு செய்து தடுப்பு ஏற்படுத்தியதால் தண்ணீர் செல்வது தடைபடுகிறது. தண்ணீரும் தேங்காததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
ஓடையில் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் கனமழை பெய்யும்போது கதிரம்பட்டி கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி 2009-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி ஈரோடு வட்டாட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடையின்றி தண்ணீர் செல்ல வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை.
தாசில்தார் மட்டுமல்லாமல், நசியனூர் வருவாய் ஆய்வாளர், கதிரம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரும் ஓடையில் கழிவு மண்ணை கொட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். நீர்நிலைகளை பாதுக்காக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஈரோடு மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை பொறியாளர் ஆகியோர் பெரும்பள்ள ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, ஓடையை மீட்டு பழைய நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த விஷயத்தில் கடமையைச் செய்ய அவர்கள் தவறிவிட்டனர். எனவே, பெரும்பள்ள ஓடையை தூர்வாரி மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பெரும்பள்ள ஓடையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. நீதிபதிகள் சதீஷ் கே.அக்னி ஹோத்ரி, பி.தேவதாஸ் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பெரும்பள்ள ஓடையில் ஆய்வு செய்யப்பட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அதையடுத்து மனுதாரர் வழக்கறிஞர் எல்.சந்திரகுமார் வாதிடும்போது, பெரும்பள்ள ஓடை மீது சாலை அமைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், பெரும்பள்ள ஓடை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள அரசு அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.