Tuesday 7 August 2018

தி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார்!! ஓய்வறியா சூரியன் ஓய்வெடுத்துக் கொண்டது

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 11 நாட்கள் ஆகியது. அகில இந்திய அரசியல் தலைவர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், கேரள ஆந்திரா, மாநில முதல்வர்கள்,  திரை உலக பிரபலங்கள் என காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்து சென்றனர்

வயது முதிர்வு காரணமாக கருணாநிதி உடல்நிலையில் ஏற்றமும்-இறக்கமுமாக காணப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர்.

இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதாக நேற்று மதியம் தகவல்கள் வெளியானது. இது தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதை தொடர்ந்து நேற்று காலை காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் குடும்பத்தினர் ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள்,   தயாளு அம்மாள், மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தனர்

நேற்று மாலை 6.30 மணி அளவில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி ஆஸ்பத்திரி சார்பில் 6-வது அறிக்கை வெளியிடப்பட்டது அதில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அவரது வயது மூப்பின் மூலம் வரும் பிரச்சினைகளை கணக்கிடும் போது, முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பராமரிப்பதில் சவாலான நிலையே தொடர்கிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவ சிகிச்சையை அடுத்த 24 மணி நேரத்தில், அவரது உடல் எவ்வாறு ஏற்கிறது என்பதை வைத்துத்தான் நோயில் இருந்து அவர் மீள்வதை தீர்மானிக்க முடியும் என கூறப்பட்டது.

அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே அரசியல் கட்சியினரும் தொண்டர்களும் மருத்துவமனை முன்பு குவிய தொடங்கினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தொண்டர்கள் வா வா தலைவா, கலைஞர் வாழ்க என விடிய விடிய கோஷமிட்டபடியே இருந்தனர்.

இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின், கனிமொழி, செல்வி, ஆ.ராசா வருகை தந்தனர். கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியம், உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியது. தீவிர சிகிச்சை பிரிவில்  கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் மாலை 4.30  மணிக்கு காவேரி மருத்துவமனை சார்பில் 7-வது அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கருணாநிதி உடல் நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும். கடந்த சில மணிநேரஙகளில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. முடிந்தவரை அவருக்கு சிகிச்சை அளிக்கபட்ட போதிலும் அவரது உடலின் முக்கிய உறுப்புகள் செயல் இழந்து வருகிறது என கூறப்பட்டது.

இந்நிலையில் 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 94. இன்று மாலை 6:10 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது என காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment