Sunday 4 June 2017

சென்னையில் கோலாகலம் 94-வது பிறந்த நாள்-சட்டப்பேரவை வைர விழாவையொட்டி கருணாநிதிக்கு புகழாரம்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழாவும், அவரது 60 ஆண்டு கால சட்டமன்ற உறுப்பினர் பணியை கவுரவிக்கும் வகையில் சட்டப்பேரவை வைர விழாவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

விழா மேடை தமிழக சட்டப்பேரவை வடிவில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவுக்கு, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். முதன்மை செயலாளர் துரைமுருகன் அனை வரையும் வரவேற்றார்.

கருணாநிதிக்கு புகழாரம்


சிறப்பு விருந்தினர்களாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் வி.நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் டெரிக் ஓ பிரையன், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. மஜித் மேனன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.

விழாவில், பேசிய தலைவர்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அரசியல் பயணத்தை சுட்டிக்காட்டி புகழாரம் சூட்டி பேசினார்கள்.

பங்கேற்ற தலைவர்களுக்கு சால்வை மற்றும் நினைவு பரிசுகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தலைவர்கள் அனைவரும் கைகளை பற்றிக்கொண்டு உயர்த்திக் காண்பித்து மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.

ராகுல்காந்தி


விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி பேசும்போது, “கருணாநிதி மேலும் பல பிறந்த நாட்களை காண வேண்டும் என்றும், நல்ல உடல்நலத்தோடு அவர் இருக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன். கருணாநிதி கோடானு கோடி தமிழ் மக்களால் ஆழமாக நேசிக்கப்படுகிறார். இதுவே அவருக்கு மிகப்பெரிய பலம். அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதற்கு காரணம், மக்கள் மீது அவர் வைத்திருக்கும் நேசமும், மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நேசமும் தான். கருணாநிதி பேசும்போது, அது அவர் குரலாக மட்டும் அல்லாமல், தமிழக மக்களின் குரலாகவும் இருக்கிறது” என்றார்.

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் பேசும்போது, “கருணாநிதி 60 ஆண்டு காலம் சட்டசபை உறுப்பினராக பணியாற்றிய பெருமைக்குரியவர். இதன் மூலம் புதிய அத்தியாயத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். அகில இந்திய அளவில் கருணாநிதி படைத்த சரித்திரத்தை யாரும் தகர்க்க முடியாது. இதுவரை யாரும் இந்த சாதனையை படைக்கவில்லை. சட்டசபை தேர்தலில் ஒருமுறைகூட தோற்காத தலைவராக அவர் இருக்கிறார். 5 முறை முதல்-அமைச்சராக இருந்து இருக்கிறார். இப்படிப்பட்ட அரசியல் அனுபவம் இந்தியாவில் வேறு யாருக்கும் இருக்காது” என்றார்.

பாரத ரத்னா விருது

புதுச்சேரி மாநில முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, “தமிழுக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டுக்கொண்டு இருப்பவர் கருணாநிதி. தமிழ் மக்களுக்காக அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியவர். கின்னஸ் புத்தகத்தில் எழுதப்படக்கூடிய தலைவராக கருணாநிதி இருக்கிறார். மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்” என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை குழு தலைவர் டெரிக் ஓ பிரையன் எம்.பி. பேசும்போது, “மம்தா பானர்ஜியின் கொள்கையும், கருணாநிதியின் கொள்கையை எதிரொலிக்கிறது. தமிழகத்தில் தமிழ் இருக்க வேண்டும் என்று கருணாநிதி விரும்புவதுபோல, வங்காளத்தில் பெங்காலி இருக்க வேண்டும் என்பதில் மம்தா பானர்ஜி உறுதியாக இருக்கிறார்” என்றார்.

No comments:

Post a Comment