Saturday 31 December 2016

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா


அதிமுக பொதுச்செயலாளராக இன்று (சனிக்கிழமை) கட்சியின் தலைமை அலுவலகத்தில் சசிகலா முறைப்படி பொறுப்பேற்றார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்துக்கு வந்த அவர் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பொதுச்செயலாளர் அறைக்குச் சென்று அங்கு இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்துக்கும் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனையில் ஈடுபட்டார்..
அதைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதுடன், எம்ஜிஆர், அண்ணா நினைவிடங்களிலும் மரியாதை செலுத்தினார்.
பொதுக்குழுவில் தீர்மானம்:
அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா பொதுச் செயலாளராக முன்னிறுத்தப்பட்டார். வியாழக்கிழமை நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், தேர்தல் மூலம் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படும் வரை, சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்து, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment