Thursday 26 September 2013

இந்திய பல்கலைக்கழகங்களின் நிலை வேதனையளிக்கிறது: குடியரசுத் தலைவர்

பழங்காலத்தில் இந்திய பல்கலைக்கழகத்தில்தான் வெளிநாட்டு மாணவர்கள் அதிகளவில் கல்வி பயின்றனர். அப்புகழை மீண்டும் பெறுவோம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்தார்.
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் 23-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. குடியரசுத்தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக புதுச்சேரி வந்த அவர், மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி நிகழ்த்திய உரை:
பட்டம் பெறுவதோடு நிற்காமல் அறிவை தொடர்ந்து மேம்படுத்துதல் அவசியம். உலகளவில் முதல் 200 இடங்களில் இந்திய பல்கலைக்கழகம் ஒன்றுக்கூட இல்லை. இது வேதனையளிக்கிறது. இதை மாற்றி சிறந்த இடத்தை பெறும் தகுதியும், திறமையும் இந்திய கல்வி நிறுவனங்களுக்கு உண்டு.
கடந்த 6-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவில் இருந்த நாளந்தா, சோமபுரா பல்கலைக்கழகங்களில் உலகளாவிய மாணவர்கள் பயின்றனர். அப்புகழை மீண்டும் பெறுவோம்.
சிறந்தது ஆசிரியர் பணியே. மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிப்பது ஆனந்தமளிக்கும். அத்துடன் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருப்பது அவசியம். அறிவை போதிப்பதில் கடமையும், பொறுப்புணர்வும் தேவை.
அரசியல் சட்டப்படி கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. தரமான கல்வியை பெறுவது நம் உரிமை.
ஒழுக்கம், கடமை உணர்வு, கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் எந்த கடின சூழலையும் சமாளிக்கலாம் . இந்தியாவை முன்னேற்றுவதில் மாணவ, மாணவியருக்கு பெரும் பங்கு உள்ளது என பேசினார்.

No comments:

Post a Comment