Saturday 28 September 2013

Kodikkalpalayam - பொது விநியோக அங்காடிகளிலும் நுகர்வோர் விழிப்புணர்வு பொதுத்தகவல் பலகை

திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 695 பொது விநியோக அங்காடிகளிலும் நுகர்வோர் விழிப்புணர்வு பொதுத்தகவல் பலகை பொருத்தப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் கூறினார்.

விழிப்புணர்வு பொதுத்தகவல் பலகை

திருவாரூர் அருகே எண்கண் ஊராட்சியில் உள்ள கூட்டுறவு நியாய விலை அங்காடியில் நுகர்வோர் விழிப்புணர்வு பெறுவதற்காக தமிழக அரசினால் அமைக்கப்பட்டுள்ள பொதுத்தகவல் பலகை பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட மாவட்ட கலெக்டர் நடராசன் நுகர்வோர் விழிப்புணர்வு பொதுத்தகவல் பலகையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

பொதுமக்கள் தாங்கள் வாங்கும் எந்த ஒரு பொருளுக்கும் தரம் மற்றும் சேவையில் ஏதேனும் குறைகள் தெரிய வந்தால் அதனை உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும், அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்வதற்கான, விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் அனைத்து கிராமங்களிலும் உள்ள பொதுவிநியோக அங்காடிகளில், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் குறித்த தகவல் பலகைகள் அமைத்திட அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில் இந்த தகவல் பலகையில் தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி சேவை எண், மாநில நுகர்வோர் உதவி மைய தொலைபேசி எண் மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தின் தொலைபேசி எண் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் நுகர்வோர் வாங்கும் பொருட்களின் சேவை குறைபாடு, தரம் குறைபாடு குறித்து குறுஞ்செய்தி அனுப்புவதற்கான எண்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தாங்கள் வாங்கும் எந்த ஒரு பொருளுக்கும் ரசீது பெற்று, தங்களுக்குள்ள நுகர்வோர் உரிமையை பெற வேண்டும். வாங்கிய் பொருட்களில் தரம் குறைவாகவோ, பெறும் சேவையில் குறைபாடுகளோ காணப்பட்டால் தகவல் பலகையில் தெரிவித்துள்ள எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் நடராசன் கூறினார்.

No comments:

Post a Comment