Sunday 28 January 2018

திருவாரூர் வங்கி ஏ.டி.எம் கொள்ளை முயற்சி


திருவாரூர் தெற்கு வீதியில் தனியார் வங்கியின் பிரதான கிளை உள்ளது. இந்த வங்கியின் முகப்பு பகுதியில் வங்கிக்கான ஏ.டி.எம். மையம் உள்ளது.

இந்த ஏ.டி.எம்.மில் தினமும், நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கான ரூபாய் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்த வங்கி மற்றும் ஏ.டி.எம். ஆகியவற்றுக்கு காவலாளிகள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மர்ம மனிதர்கள் வங்கி ஏ.டி.எம்.மில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்துள்ளனர். அவர்கள், ஏ.டி.எம். வாசலில் இருந்த கண்காணிப்பு கேமராவை முதலில் உடைத்துள்ளனர்.

இந்த சத்தம் கேட்டு அங்கு காவல் பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளி சேதுரத்தினம், ஏ.டி.எம். மையத்தின் உள்ளே இருந்து வெளியே வந்துள்ளார். அங்கு மர்ம மனிதர்கள் கேமராவை உடைத்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அவர் சத்தம் போட்டு உள்ளார்.

அங்கு காவலாளி இருக்க மாட்டார் என நினைத்து கொள்ளையடிக்க வந்த மர்ம மனிதர்கள், காவலாளி சத்தம் போட்டதால் பயந்துபோய் கொள்ளையடிக்கும் திட்டத்தை கைவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். சரியான நேரத்தில் காவலாளி சத்தம் போட்டதால் ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளை போகாமல் தப்பியது.

இந்த கொள்ளை முயற்சி குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கேமரா உடைக்கப்படுவதற்கு முன்பு அதில் பதிவாகி இருந்த பதிவுகளை கைப்பற்றினர். இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

திருவாரூரில், வங்கி ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

No comments:

Post a Comment