Thursday 18 January 2018

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் நடவடிக்கை ‘ஹஜ்’ மானியம் இந்த ஆண்டு முதல் ரத்து மத்திய அரசு அறிவிப்பு


இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று, வாழ்நாளில் ஒரு முறையாவது சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனிதப்பயணம் மேற்கொள்வது ஆகும்.

ஹஜ் புனிதப்பயண வகையில் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.700 கோடி செலவிடப்பட்டு வந்து உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், 2012-ம் ஆண்டு, மே மாதம் 8-ந் தேதி ஹஜ் புனிதப்பயணம் தொடர்பான ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய நீதிபதிகள் அப்தாப் ஆலம், ரஞ்சனா தேசாய் ஆகியோர் விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பித்தனர்.

அதில் அவர்கள், ஹஜ் மானியத்தை 10 ஆண்டுகளுக்குள் (2022-ம் ஆண்டுக்குள்) படிப்படியாக விலக்கிக்கொண்டு விட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இதையொட்டி தற்போது அமலில் இருந்து வருகிற ஹஜ் புனிதப் பயண கொள்கையை பரிசீலனை செய்யவும், 2018-22 ஆண்டுகளுக்கான புதிய ஹஜ் கொள்கையை வகுக்கவும் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது.

அப்போது மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, ஹஜ் மானியம் விரைவில் ரத்து செய்யப்படும் என அறிவித்து இருந்தார்.

இது தொடர்பாக அவர், “சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு ஹஜ் மானியத்தை நிறுத்தி விட உத்தரவிட்டது. எனவே புதிய கொள்கையை வகுக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் சிபாரிசுகள்படி, ஹஜ் மானியத்தை படிப்படியாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் இந்த ஆண்டு முதல் ஹஜ் மானியத்தை முழுமையாக ரத்து செய்து மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுபற்றி மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு முதல் ஹஜ் புனிதப்பயணத்துக்கு மானியம் வழங்கப்பட மாட்டாது.

ஹஜ் மானியத்துக்கு என ஒதுக்கப்பட்டு வந்த நிதி, சிறுபான்மை சமூக பெண்களின் கல்விக்காக பயன்படுத்தப்படும். தாஜா செய்யாமல், கண்ணியமான வகையில் முன்னேற்றத்துக்கு உதவுவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டு உள்ளோம்.

ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டு உள்ளபோதும், அது புனிதப்பயணம் மேற்கொள்கிறவர்களின் பயண செலவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

மேலும், இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு 1 லட்சத்து 75 ஆயிரம் இஸ்லாமியர்கள் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வார்கள்.

இந்தியாவில் இருந்து கப்பல் மூலமாக ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வதற்கும், இதற்கான வழிமுறைகளை முடிவு செய்வதற்கும், இரு தரப்பு அதிகாரிகள் அமர்ந்து பேசவும் சவுதி அரேபிய அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டு உள்ளது.

இந்த ஆண்டு முதல் 1,300 பெண்கள், ஆண் துணையின்றி ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வார்கள். பெண் ஹஜ் உதவியாளர்கள் அவர்களுடன் செல்வார்கள். அவர் கள் சவுதி அரேபியாவில் தங்குவதற்கு ஆன ஏற்பாடுகளை அரசு செய்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment