Sunday 3 December 2017

வங்க கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயல் சின்னமாக வலுப்பெற வாய்ப்பு

தமிழகத்தில் ‘ஒகி’ புயல் ஆபத்து நீங்கினாலும், தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது.
‘சாகர்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த புயல் வரும் 4, 5 மற்றும் 6–ந் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை தாக்கும் ஆபத்து உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:–
கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் வலுப்பெற்று நகர்ந்து சென்று லட்சத்தீவு பகுதியில் உள்ள அமினித்தீவுக்கு தென்கிழக்கே 270 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு உள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் லட்சத்தீவை கடந்து செல்லும்.
புயலின் தலைப்பகுதி தற்போது லட்சத்தீவு அருகே இருந்தபோதிலும், அதன் வால் பகுதி தமிழகத்தை ஒட்டிய பகுதியில் இருப்பதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்கிடையே தென்மேற்கு வங்க கடல் பகுதியை ஒட்டிய தமிழக கடற்கரைக்கு அப்பால் வழிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 36 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, அது புயல் சின்னமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அப்படி புயலாக மாறினால் வருகிற 4–ந் தேதிக்குள் வடமேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (இந்த தகவலை இந்திய நீர்வள ஆணையமும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது). இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று மதியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வடக்கு சுமத்ரா தீவு அருகே மையம் கொண்டுள்ளது. அதாவது தமிழக கடல் பகுதியில் இருந்து 1,600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக(புயல் சின்னமாக) மாறுகிறது.
இதனால் புயல் இருக்கும் இடத்தில் வானில் கருமேகத்தின் சுழற்சி 5.8 கிலோமீட்டர் தொலைவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாழ்வு மண்டலம் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும். இந்த தாழ்வு மண்டலமானது வட தமிழக கடலோர கரையை நெருங்கும் போது புயலாக மாற வாய்ப்புள்ளது.
‘சாகர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல் சின்னம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நாளை(திங்கட்கிழமை) முதல் வருகிற 6–ந் தேதி வரை கன மழை பெய்யும்.
குறிப்பாக வட தமிழகத்திலும், புதுச்சேரியிலும் 5–ந்தேதி மற்றும் 6–ந்தேதி மிக பலத்த மழை பெய்யும்.
மேலும் ‘ஓகி’ புயலானது குஜராத்தை நோக்கி நகருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் படிப்படியாக மழை குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment