Saturday 9 December 2017

ஏ.டி.எம்.கார்டை மாற்றி கொடுத்து ஓய்வு பெற்ற நூலகர் வங்கி கணக்கில் ரூ.24 ஆயிரம் மோசடி


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் வடகாடு பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் (வயது 68). ஓய்வு பெற்ற நூலகர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓய்வூதிய தொகையை எடுப்பதற்காக முத்துப்பேட்டையில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு வந்தார். அப்போது அருகில் நின்ற வாலிபரிடம், கண்ணையன் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.24 ஆயிரம் பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். கார்டை வாங்கிய வாலிபர் உங்களது வங்கி கணக்கில் பணம் இல்லை என கூறியுள்ளார். பின்னர் கண்ணையனின் ஏ.டி.எம். கார்டை கொடுப்பதற்கு பதிலாக தனது ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்துள்ளார். மறுநாள் கண்ணையன் பணம் எடுப்பதற்கு ஏ.டி.எம். வந்துள்ளார். அப்போது பணம் எடுக்க முடியவில்லை. உடனே வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அப்போது வங்கி அதிகாரி ஏ.டி.எம். கார்டை வாங்கி பார்த்தபோது இது உங்களுடைய கார்டு அல்ல வேறு ஒருவருடைய கார்டு என கூறியுள்ளார்.

இதுகுறித்து கண்ணையன் முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூர் சங்கேந்தி சோத்திரியம் ரோட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜதுரை (23), கண்ணையனின் ஏ.டி.எம். கார்டை நூதன முறையில் மோசடி செய்து ரூ.24 ஆயிரம் பணத்தை எடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்தனர். பின்னர் அவரை திருத்துறைப்பூண்டி சப்-மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்

No comments:

Post a Comment