Tuesday 2 May 2017

டாஸ்மாக் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரியில் வெடிகுண்டு சிக்கியது 3 பேர் கைது

திருவாரூர் மாவட்டம் விளமலில் டாஸ்மாக் குடோன் உள்ளது. இந்த குடோனுக்கு சென்னை, கோவை, காஞ்சீபுரம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள மது ஆலைகளில் இருந்து மதுபாட்டில்கள் லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு வரும் லாரிகள், மதுபாட்டில்களை இறக்குவதற்காக குடோனின் வளாகத்திலேயே ஒரு வாரம் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் கோவையில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றி கொண்டு திருவாரூருக்கு வரும் லாரியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சென்னை எண்ணூர் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் லாரியை சோதனையிடுவதற்காக சென்னையில் இருந்து திருவாரூர் விரைந்தனர். நேற்று காலை திருவாரூர் விளமல் டாஸ்மாக் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கு உரிய லாரியை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர். அப்போது லாரியில் டிரைவரின் இருக்கைக்கு அருகே ஒரு ஹாட்பாக்சில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றும், நாட்டு வெடிகுண்டு ஒன்றும் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் வெடிகுண்டுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். லாரியில் இருந்த அரிவாளையும் போலீசார் கைப்பற்றினர்.

கிளனர் கைது

கைப்பற்றப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தால் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு சேதம் ஏற்படும் என்றும், அதை சரியான நேரத்தில் அப்புறப்படுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். வெடிகுண்டு இருந்த லாரியை காரைக்காலை சேர்ந்த மோகன் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக ராஜ்குமார் என்பவர் வந்தார். இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் கிளனராக பணியாற்றிய ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை போலீசார் மேலும் 2 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களின் பெயர், விவரங்கள் தெரியவில்லை.

நாச வேலைக்கு திட்டமா?

வெடி குண்டு கொண்டு வரப்பட்ட லாரியில் கோவையை சேர்ந்த ஒரு சிறுவனும் வந்துள்ளான். அவனிடம் திருவாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுபாட்டில்களுடன் வெடிகுண்டு எடுத்துக் கொண்டு லாரி திருவாரூர் வந்ததற்கான காரணம் என்ன? திருவாரூரில் நாச வேலையை நிகழ்த்த சதி திட்டம் தீட்டப்பட்டதா? என்பது பற்றி திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள லாரி டிரைவர்கள் மோகன், ராஜ்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அ.தி.மு.க. கொடி கட்டிய கார்

இதனிடையே அ.தி.மு.க. கட்சியின் கொடி கட்டப்பட்ட கார் ஒன்று சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மதுபான கிடங்கு அமைந்துள்ள பகுதியில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் மற்றும் போலீசார் விசாரித்த னர். இதில் அந்த கார் திருவாரூர்-கும்பகோணம் சாலையில் குடவாசல் அருகே சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதுபற்றி குடவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குடவாசல் அருகே உள்ள அகரஓகை பகுதியில் அந்த காரை போலீசார் வழிமறித்து விசாரித்தனர். அப்போது, அந்த காரில் இருந்தவர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் காரை சுற்றி வளைத்தனர். பின்னர் குடவாசல் போலீசார் விசாரணை நடத்தியதில், சென்னை எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், சென்னையை சேர்ந்த கீர்த்திரமேஷ் என்பவரை பிடித்து காரில் அழைத்து செல்வது தெரியவந்தது. கீர்த்திரமேஷ் பல்வேறு வழக்குகள் தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment