Sunday 30 June 2019

ஹஜ் பயணத்துக்கான இந்தியாவின் ஒதுக்கீட்டை அதிகரித்தது சவூதி அரேபியா*

*

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இந்திய யாத்ரீகர்களுக்கான ஒதுக்கீட்டை 2 லட்சமாக சவூதி அரேபியா அதிகரித்துள்ளது.
முஸ்லிம் சமூகத்தினரின் புனித இடமான சவூதி அரேபியாவிலுள்ள மெக்கா மற்றும் மதீனாவுக்கு உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் மக்கள் ஆண்டுதோறும் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். புனிதப் பயணம் அமைதியாகவும், இடையூறின்றியும் நடைபெறும் நோக்கில், ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட ஒதுக்கீட்டை சவூதி அரேபியா அளித்து வருகிறது.
அந்த வகையில், இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் 1.70 லட்சம் பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள சவூதி அரேபியா அனுமதி வழங்கியிருந்தது. அந்த எண்ணிக்கையைத் தற்போது 2 லட்சமாக சவூதி அரேபியா உயர்த்தியுள்ளது.
ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டினிடையே, சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக, வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது, ஆண்டுதோறும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கையை 1.70 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்துவதாக இளவரசர் முகமது பின் சல்மான் உறுதியளித்தார்.
மேலும், இரு நாடுகளுக்கிடையேயான சுற்றுலாவை அதிகரிப்பது தொடர்பாகவும், விமானச் சேவைகளை அதிகரிப்பது தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்தாண்டு இறுதியில் சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு இளவரசர் சல்மான் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார் என்றார் விஜய் கோகலே.
ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டை சவூதி அரேபியா தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு 35,000 இடங்களையும், கடந்த ஆண்டு 5,000 இடங்களையும் கூடுதலாக ஒதுக்கிய நிலையில், தற்போது 30,000 இடங்களை இந்தியப் பயணிகளுக்காக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment