Sunday 3 September 2017

சி.பி.எஸ்.இ.-க்கு இணையாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வுகளை சந்திக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதுடன், சி.பி.எஸ்.இ-க்கு இணையாக பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

நெஞ்சத்தை உருக்கியது

மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எங்கள் நெஞ்சத்தை உருக்கிக் கொண்டு இருக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். அதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற ஆணையிட்டு இருக்கிறார்.

அதன் அடிப்படையில் மத்திய அரசு கொண்டு வரும் பொதுநுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் சந்திக்கின்ற அளவுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் 412 மையங்கள் அமைத்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் 54 ஆயிரம் கேள்விகளும், அதற்கான பதில்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டு இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த பயிற்சிக்கு பின்னர் நம்முடைய மாணவர்கள் இந்தியாவிலேயே முதன்மை மாணவர்களாக திகழ்வார்கள். இனி எதிர்காலத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்குகின்ற வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். அப்படி மாற்றி அமைக்கும் போது சி.பி.எஸ்.இ.க்கு இணையாக, அதே நேரத்தில் நம்முடைய பண்பாடு, கலாசாரம், தொன்மை அனைத்தும் அதிலே இடம் பெறும். அந்த அளவுக்கு நம்முடைய பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.

No comments:

Post a Comment