Monday 18 May 2020

இஸ்லாமிய நண்பர்கள் கவனத்துக்கு

.

இடதுசாரிகள், பெரியாரிஸ்டுகள், பகுத்தறிவாளர்கள், இந்து மதத்தையும், பிஜேபியையும், சங்கிகளையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்றால், இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று பொருளல்ல.   இந்து மதத்தை கூடுதலாக விமர்சனம் செய்வதற்கு காரணம், அது பெரும்பான்மை மதமாக இருப்பதும், அதில் உள்ள சாதிய ஒடுக்குமுறையுமே.   மேலும், இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும், சிறுபான்மையினராக இருப்பதாலும், அவர்கள் ஏற்கனவே பெரும்பான்மையாக உள்ள  மதவெறி பிடித்த சங்கிகளால் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுவதாலும், சிறுபான்மையினருக்கு ஆதரவாக நிற்பது எங்கள் கடமை என்று  என்னைப் போன்றவர்கள் கருதுகிறோம்.  

இஸ்லாதத்தில், பிற மதங்களைப் போலவே, கண்டிக்கப்பட வேண்டிய ஏராளமான மூடநம்பிக்கைகள் உள்ளன.   பெண்களுக்கு புர்கா கட்டாயம், பன்றி இறைச்சி உண்ணாதது, சொர்க்கத்தில் ஏழு எழுபது கன்னிகள், என ஏராளமான விஷயங்கள் விவாதிக்க உண்டு.  

அனைத்து கடவுள்களும், அனைத்து மதங்களும் மனிதனின் படைப்பே என்பதை என்னைப் போன்றவர்கள்  உறுதியாக நம்புகிறோம்.  அதனால், இந்து மதம் உள்ளிட்ட அனைத்து மதங்களின் மீதும் நாங்கள் வைத்திருக்கும் மரியாதைதான் இஸ்லாம் மதத்துக்கும் = எந்த மரியாதையும் இல்லை.

பிஜேபி, மோடி, இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் பதிவுகளில் பாய்ந்து சென்று கருத்து பதிவு செய்யும் பல இஸ்லாமியர்கள்,  இஸ்லாத்தை பற்றி பேசினாலே, சுயசிந்தனையை இழந்து அரற்றுவதை காண முடிகிறது.  மிக மிக சகிப்புத்தன்மை குறைவான மதம் இஸ்லாம் என்று நான் வெளிப்படையாகவே குற்றம் சுமத்துகிறேன்.   ப்ரான்சு நாட்டில் நடந்த சார்லி ஹெப்டோ படுகொலைகள் முதல், இந்தியாவில் நடந்த பல்வேறு தீவிரவாத சம்பவங்களை என்னால் உதாரணமாக கூற முடியும்.

பிற மதங்களில் உள்ளது போல இஸ்லாத்தில் ஏன் நாத்தீகர்கள் அதிக அளவில் இல்லை என்பதை யோசித்திருக்கிறீர்களா ?  ஏனெனில் வெளிப்படையாக நாத்தீகம் பேசிய தோழன் பாரூக்கின் கொலைதான் அதற்கு காரணம்.  முகநூலில் நாத்தீகம் பேசிய சில இஸ்லாமியர்களுக்கு அவர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு, உளவுத் துறை அவர்களை அழைத்து, எழுதுவதை நிறுத்தச் சொன்ன சம்பவங்களை நான் அறிவேன்.  

அதனால் இஸ்லாத்தை விமர்சித்து எழுதினால், பதிவில் வந்து, “உங்களிடம் நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை”, “இது போன்ற பதிவுகளை தவிர்க்கலாமே”, “உங்கள் நன்மதிப்பை இழக்கிறீர்கள்”, “உங்களை நல்லவர் என்று நினைத்து ஏமாந்து விட்டேன்”, “உன்னைப் போய் சீ ஃபர்ஸ்ட் லிஸ்டில் வைத்திருந்தேன்”,  “உன் பதிவுக்கெல்லாம் முதலில் வந்து லைக் போட்டேனே” "நீ ஒரு ஆர்.எஸ்.எஸ் ஸ்லீப்பர் செல்" என்பது போன்ற இலவச அட்வைஸ்கள் முதல், “இது போன்ற பதிவுகளை நிறுத்திக் கொள்வது நல்லது”,  “ஐடி தூக்கப்படும்” “ஃபத்வா” போன்ற மிரட்டல்கள் விடும் வேலைகளுக்கு எந்த பலனும் இருக்காது.

அனைத்து மதங்களும் என்னைப் போன்றவர்களுக்கு ஒன்றுதான் = கட்டுக்கதைகளின் தொகுப்பு.

ஆகையால் வெட்டியாக நேரத்தை வீணாக்காமல், அப்படியே யு டர்ன் போட்டு கிளம்புங்கள்.   நான் எழுதுவது, எனது மகிழ்ச்சிக்காக.  அதை தொடர்ந்து செய்வேன்.

No comments:

Post a Comment