Tuesday 5 July 2016

ரயில் முன்பதிவு மையம் செயல்படாததால் பயணிகள் ஏமாற்றம்

திருவாரூர் ரயில் நிலையத்தில் தீபாவளி பயணத்துக்கான முன் பதிவு மையம் செயல்படாததால் ரயில் பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.
ரயில்வேதுறையில் பயணிகளின் நலனுக்காக முன்பதிவு செய்து பயணம் செய்யும் சேவை யை செய்து வருகிறது. அறிவியல் தொழில்நுட்ப வசதி மற்றும் வளர்ச்சி காரணமாக ரயில்வேதுறை தனது சேவையை நவீனப்படுத்தி வருகிறது. பல்வேறு சேவைகளின் ஒரு பகுதியாக தீபாவளி பண்டிகைக்கு விழா நாளிலிருந்து 120 நாளுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது.
 அந்த வகையில் நிகழாண்டு அக்.29-ம் தேதி தீபாவளி பண்டிகை நாளையொட்டி ரயிலில் பயணிக்க தீபாவளிக்கு முதல் நாள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக ஜூன் 29-ம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறை நாடுமுழுவதும் கடந்த ஜூன் 29-ம் தேதி அனைத்து ரயில் நிலையங்களிலும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. ஆனால் திருவாரூர் ரயில் நிலையத்தில் தீபாவளி பயணத்துக்காக முன்பதிவு செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முன்பதிவு நேரமான காலை 8 மணியை கடந்தும் ரயில் நிலையத்தில் முன்பதிவு தொடங்கவில்லை.
 வரிசையில் நின்ற பயணிகள் ரயில்வே ஊழியர்களிடம் கேட்ட போது, பயணச்சீட்டு கொடுக்கும் பிரிண்டர் இயந்திரம் பழுந்தடைந்துள்ளது, அதனால் முன்பதிவு செய்ய இயலாது எனக் கூறியதுடன், ஓர் அறிவிப்பு பதாகையும் வைத்துள்ளனர். பிறகு பயணிகள் ரயில்வே ஊழியர்களிடம் விவாதம் செய்தபோது காலை 8.45 மணியளவில் பிரிண்டர் இயந்திரம் கொண்டு வந்து வைத்துள்ளனர்.
அந்த நேரம் முன்பதிவு முடிந்துவிட்டது. இதனால் ரயில் பயணிகள் தீபாவளி பயணத்துக்கு முன்பதிவு செய்ய இயலாமல் தவித்து புலம்பிக்கொண்டு காத்திருப்பு பட்டியலில் பயணச்சீட்டு பெற்று திரும்பினர்.
 தீபாவளி பண்டிக்கைக்கு செல்ல முன்பதிவு நிலைமை இப்படியென்றால், விழா முடிந்து 31.10.2016 அன்று திரும்பிச்செல்ல முன்பதிவு செய்யவும் முடியாமல் தவித்த நிகழ்வும் நடந்தது. அதாவது 31.10.2016 அன்றைய பயணத்துக்கான முன்பதிவு 3.7.2016 அன்று செய்ய வேண்டும். கடந்த 29-ம் தேதி நிகந்த நிகழ்வை போல் ஞாயிற்றுக்கிழமையும் திருவாரூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்ய ரயில் நிலையத்தில் காலை 8 மணி யிலிருந்து 8.30 மணி வரை ஊழியர்கள் யாரும் இல்லை. இதனால் ரயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ரயில் மற்றும் பேருந்து பயணிகள் நலச்சங்க தலைவர் ஆர். தெட்சிணாமூர்த்தி கூறியது: திருவாரூர் ரயில்வே முன்பதிவு நிலைய மையத்தில் இதேபோல் நிகழ்வு தொடர்கதையாகி வருகிறது.
எனவே இக்குறையை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென்று சென்னை தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளோம். மேலும் இதுகுறித்து புகார் மனுவை, சங்க நிர்வாகிகள் பூங்குன்றன், தியாகராஜன், சித்தார்த்தன் உள்ளிட்டோருடன் சென்று திருவாரூர் ரயில் நிலைய மேலாளரிடம் கொடுத்துள்ளோம் என்றார் அவர்.

No comments:

Post a Comment