Wednesday 30 November 2016

பணப் புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை: வங்கிகளில் பணம் எடுக்கும் விதிமுறைகளை தளர்த்தியது ரிசர்வ் வங்கி

நாட்டில் பணப் புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் எடுப்பதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது.
இது இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுவரை ஒருவர் ஒரு வாரத்திற்கு ரூ.24,000 மட்டுமே வங்கி டெபாசிட்டில் இருந்து எடுத்துக் கொள்ள முடிந்தது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பால் கூடுதல் பணத்தை டெபாசிட் தொகையில் இருந்து எடுக்க முடியும். இருப்பினும், புதிய உச்ச வரம்பு என்னவென்பதை ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை.
கடந்த 8-ம் தேதியன்று ரு.500, 1000 செல்லாது என்ற பண மதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் அறிவித்தார். அதன் பின்னர் வங்கி, ஏடிஎம்களில் பணம் எடுப்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை மத்திய அரசு விதித்து வந்தது. வங்கிகளில் டெபாசிட் செய்த பணத்திலிருந்து ஒருவர் வாரத்துக்கு ரூ.24,000 மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும் என்ற நடைமுறை அமல் படுத்தப்பட்டது.
இதனால்,வாரச் சம்பளம், தினக்கூலி போன்றவற்றை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சிறு வியாபாரிகள், வணிகர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுவந்தது. பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும், நோட்டு நடவடிக்கைக்குப் பின்னர் நியாயமான முறையில் சம்பாதித்த புதிய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய மக்கள் மத்தியில் தயக்கம் ஏற்பட்டது.
எனவே, நியாயமான வகையில் சேர்த்த புதிய பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்வதை ஊக்கப்படுத்தும் விதமாகவும், நாட்டில் பணப் புழக்கத்தை அதிகரிக்கும் விதமாகவும் புதிய அறிவிப்பை ரிச்ர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, வங்கிகளில் 29-ம் தேதி (இன்று) முதல் புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு டெபாசிட் செய்யப்படும் தொகையை கட்டுப்பாடு இல்லாமல் திருப்பி எடுத்துக் கொள்ள முடியும். அவ்வாறு டெபாசிட் செய்யும் பணத்தை திருப்பி எடுத்துக் கொள்ளும்போது வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி ரூ.2000 அல்லது ரூ.500 நோட்டுகளாக அவற்றை பெற்றுக் கொள்ளலாம். வாடிக்கையாளரின் தேவையை பரிசீலித்து பணம் வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
8.1 லட்சம் கோடி டெபாசிட்:
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் நவம்பர் 27-ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கின்படி ரூ.8.1 லட்சம் கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ரூ.34,000 கோடி அளவில் பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகள் மாற்றப்பாட்டுள்ளது. வங்கிகளில் இருந்து ரூ.2.16 லட்சம் கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

Tuesday 29 November 2016

ரொக்கப் பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்: வானொலி உரையில் பிரதமர் மோடி

ரொக்கப்பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி நாடு சென்றுகொண்டிருப்பதாக மன் கி பாத் வானொலி உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்றைய வானொலி உரையில் அவர் பேசியதாவது:

‘எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். கடந்த மாதங்களில் நாம் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தோம். ஒவ்வொரு ஆண்டைப் போலவே இந்த முறையும் தீபாவளியின் போது, நான் மீண்டும் ஒரு முறை படை வீரர்களோடு தீபாவளியைக் கொண்டாடி மகிழ, சீன எல்லைப் பகுதிகளுக்குச் சென்றேன். ITBP, இந்திய திபேத்திய எல்லைப்படை வீரர்கள், இராணுவ வீரர்கள் ஆகியோருடன் நான் இமயத்தின் சிகரங்களில் தீபாவளியைக் கொண்டாடினேன். நான் ஒவ்வொரு முறையும் செல்கிறேன், ஆனால் இந்த தீபாவளி அளித்த அனுபவம் அலாதியானது. நாட்டின் 125 கோடி மக்களூம் இந்த தீபாவளியை பாதுகாப்புப் படையினருக்கு அர்ப்பணித்தார்கள், இதன் தாக்கம் அங்கே இருந்த ஒவ்வொரு பாதுகாப்புப் படைவீரர் முகத்திலும் பிரதிபலித்தது. அவர்கள் உணர்வுகள் நிறைந்து காணப்பட்டார்கள்; இது மட்டுமல்லாமல் நாட்டு மக்கள் எனக்கு அனுப்பிய நல்வாழ்த்துச் செய்திகள், அவர்கள் தங்கள் சந்தோஷங்களில் நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு பங்களித்தது ஆகியன அற்புதமான மறுமொழியாக அமைந்தது. மக்கள் வெறும் தகவல்களை மட்டும் அனுப்பவில்லை, மனதோடு இணைந்தார்கள்...

படையின் ஒரு வீரர் எனக்கு எழுதியிருந்தார் – பிரதமர் அவர்களே, படைவீரர்களான எங்கள் அனைவருக்குமே, தீபாவளி, ஹோலி போன்ற ஒவ்வொரு பண்டிகையும் எல்லைப்புறங்களிலேயே அமையும்; ஒவ்வொரு கணத்தையும் நாங்கள் நாட்டின் பாதுகாப்பு பற்றிய எண்ணங்களிலேயே செலவிடுவோம். ஆம், இருந்தாலும், பண்டிகை நாட்களில் வீடு பற்றிய நினைப்பு வந்து விடுகிறது. ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்த முறை அப்படிப்பட்ட நினைப்பே ஏற்படவில்லை. இந்தப் பண்டிகை நாளிலே நாம் வீட்டில் இல்லையே என்ற எண்ணம் கொஞ்சம் கூட ஏற்படவே இல்லை. ஏதோ, 125 கோடி பாரதவாசிகளோடு சேர்ந்து நாங்களும் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருப்பதாகவே உணர்ந்தோம்.
எனதருமை நாட்டுமக்களே. இந்த தீபாவளிப் பண்டிகையின் போது, நமது நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கிடையில், படைவீரர்கள் மனதில் துளிர்த்த உணர்வு இந்த வேளையில் உண்டான அனுபவம், சில கணங்களோடு மறைந்து போக வேண்டுமா? நாம், ஒரு சமுதாயம் என்ற வகையில், நாடு என்ற முறையில், இந்த உணர்வை ஏற்படுத்துவது நமது இயல்பாக ஆக வேண்டும், நம் உணர்வுகளில் கலக்க வேண்டும் என்று நான் உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன். எந்த ஒரு விழாவாக இருந்தாலும் சரி, பண்டிகையாக இருந்தாலும் சரி, சந்தோஷமான வேளையாக இருந்தாலும் சரி, நமது
நாட்டின் படைவீரர்களை நாம் ஏதாவது ஒரு வகையில் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். நாடு முழுவதுமே படையினரோடு தோளோடு தோள் நிற்கும் போது, படையின் பலமும் சக்தியும் 125 கோடி மடங்கு அதிகரிக்கும் என்பது உறுதி.
சில காலம் முன்பாக ஜம்மு கஷ்மீரத்தின் கிராமங்களைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களும் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். இவர்கள் ஜம்மு கஷ்மீரத்தின் பஞ்சாயத்து மாநாட்டைச் சேர்ந்தவர்கள். கஷ்மீரப் பள்ளத்தாக்கின் பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்தார்கள். சுமார் 40-50 தலைவர்கள் இருந்தார்கள். கணிசமான நேரம் வரை அவர்களோடு உரையாடும் ஒரு சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அவர்கள் தங்கள் கிராமங்களின் வளர்ச்சி தொடர்பான சில விஷயங்களைப் பேச வந்திருந்தார்கள், சிலர் சில கோரிக்கைகளோடு வந்திருந்தார்கள், ஆனால் உரையாடல் நீளத் தொடங்கிய போது, பள்ளத்தாக்கின் சூழல், சட்டம் ஒழுங்கு நிலைமை, பிள்ளைகளின் எதிர்காலம், என பல்வேறு விஷயங்கள் அதில் இடம் பெற்றன என்பது இயல்பான ஒன்றாக அமைந்தது. மிக்க அன்போடும், திறந்த மனதோடும், கிராமத்தின் இந்தத் தலைவர்கள் உரையாடிய விதம் இதயத்தைத் தொடும்படியாக அமைந்தது. பேச்சு வாக்கில், கஷ்மீரத்தில் எரிக்கப்பட்ட பள்ளிகள் பற்றிய பேச்சு எழுந்த போது, நம் நாட்டுமக்களுக்கு இதனால் எத்தனை துயரம் ஏற்பட்டதோ, அதைப் போலவே இந்த கிராமத் தலைவர்களுக்கும் ஏற்பட்டிருப்பதை என்னால் உணர முடிந்தது; பள்ளிகள் எரிக்கப்படவில்லை, பிள்ளைகளின் எதிர்காலம் தீக்கிரையாக்கப் பட்டிருக்கிறது என்றே அவர்கள் கருதினார்கள். நீங்கள் உங்கள் ஊர்களுக்குத் திரும்பிய பிறகு இந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள் என்று வேண்டிக் கொண்டேன். கஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்த இந்த அனைத்துத் தலைவர்களும் எனக்கு அளித்த வாக்கினை மிகச் சிறப்பாக நிறைவேற்றினார்கள் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது; அவர்கள் கிராமங்களுக்குச் சென்று தொலைவில் இருப்பவர்களுக்கும் விழிப்புணர்வு ஊட்டினார்கள். சில நாட்கள் முன்பாக வாரியத் தேர்வுகள் நடைபெற்ற போது, கஷ்மீரத்தின் 95 சதவீதக் குழந்தைகள், இந்த வாரியத் தேர்வுகளில் பங்கெடுத்துக்கொண்டார்கள்.

வாரியத் தேர்வுகளில் இத்தனை பெரிய எண்ணிக்கையில் மாணவ மாணவியர் பங்கு எடுத்துக் கொள்வது என்பது, ஜம்மூ கஷ்மீரத்தின் நமது குழந்தைகள் வளமான எதிர்காலத்துக்காக, கல்வி வாயிலாக, வளர்ச்சியின் புதிய சிகரங்களை எட்ட மனவுறுதி பூண்டிருக்கிறார்கள் என்பதையே நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. அவர்களின் இந்த ஊக்கத்திற்காக நான் அந்த மாணவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், அவர்களின் பெற்றோர், உறவினர்கள், அவர்களின் ஆசிரியர்கள், அனைத்து கிராமத் தலைவர்கள் ஆகியோருக்கும் எனது இருதய பூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
அன்பு நிறை சகோதர சகோதரிகளே, இந்த முறை நான் மனதின் குரலுக்காக மக்களிடமிருந்து ஆலோசனைகளைக் கோரிய போது, அனைவரின் ஆலோசனைகளும் ஒரு விஷயம் பற்றியே வந்தது. அனைவருமே 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் குறித்து நான் விரிவான முறையில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். நவம்பர் மாதம் 8ஆம் தேதியன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு நான் ஆற்றிய உரையில், நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பேரியக்கத்தைத் தொடங்குவது பற்றிப் பேசினேன். எந்த வேளையில் நான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டேனோ, அதை உங்கள் முன்பாக வைத்தேனோ, அப்போதே இந்த முடிவு சாதாரணமானது அல்ல, கஷ்டங்கள் நிறைந்த ஒன்று என்று நான் பொதுப்படையாகவே கூறினேன். ஆனால் தீர்மானம் எத்தனை மகத்துவம் வாய்ந்ததோ, அதே அளவு முக்கியம் அதை செயல்படுத்துவது என்பதும். நமது சராசரி வாழ்க்கையில் பலவகையான புதுப்புது கடினங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது எனக்கு உத்தேசமாகத் தெரியும். அப்போதுமே கூட இந்த முடிவு மிகப் பெரியது, இதன் பாதிப்பிலிருந்து நாம் மீண்டு வர 50 நாட்கள் ஆகி விடும் என்று கூறியிருந்தேன். அதன் பிறகு தான் இயல்பு நிலை நோக்கி நம்மால் அடியெடுத்து வைக்க முடியும். 70 ஆண்டுக்காலமாக நாம் என்னென்ன நோய்களையெல்லாம் சுமந்து வருகிறோமோ, அந்த நோய்களிலிருந்து விடுதலை பெறும் முயற்சி என்பது அத்தனை சுலபமாக இருக்க முடியாது. நீங்கள் சந்திக்கும் கஷ்டங்களை எல்லாம் என்னால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் உங்கள் ஆதரவை நான் பார்க்கும் வேளையில், உங்கள் ஒத்துழைப்பைக் காணும் போதினில், உங்களை திசை திருப்பி மிரள வைக்கும் ஏராளமான முயற்சிகளையும், தொய்வடைய வைக்கும் முயற்சிகளையெல்லாம் தாண்டி, நீங்கள் சத்தியமான இந்த வழியை நன்கு புரிந்து கொண்டு விட்டீர்கள், நாட்டு நலன் கருதி இந்த விஷயத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள், இத்தனை பெரிய தேசம், இத்தனை அளவு நோட்டுக்கள், பல இலட்சம் கோடி நோட்டுக்கள், இப்படிப்பட்ட தீர்மானம் – ஒட்டுமொத்த உலகமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது, ஒவ்வொரு பொருளாதார வல்லுனரும் இதை அதிகம் அலசிக் கொண்டிருக்கிறார்கள், மதிப்பீடு செய்து வருகிறார்கள். இந்துஸ்தானத்தின் 125 கோடி நாட்டு மக்களும் இடர்களை சகித்துக் கொண்டு வெற்றி பெற்று விடுவார்களா என்று ஒட்டு மொத்த உலகமும் இந்த விஷயத்தை கவனித்துக் கொண்டிருக்கிறது. உலகத்தோர் மனங்களில் ஒரு வேளை கேள்விக்குறி இருக்கலாம்! பாரதத்துக்கு, பாரதத்தின் 125 கோடி நாட்டு மக்கள் மீது அளப்பரிய நம்பிக்கை இருக்கிறது, 125 கோடி நாட்டு மக்களும் தங்கள் மனவுறுதிப்பாட்டின் இலக்கை எட்டியே தீர்வார்கள் என்ற உறுதிப்பாடு இருக்கிறது. நமது தேசம் சொக்கத் தங்கத்தைப் போல, ஒவ்வொரு வகையிலும் தகித்துப் பிரகாசிக்கும் என்றால் இதற்கான முழுமுதற் காரணம் நமது நாட்டின் குடிமக்கள் தான், அதற்கான காரணம் நீங்கள் தான், இந்த வெற்றிப் பாதை கூட உங்கள் காரணமாகத் தான் சாத்தியமாகியிருக்கிறது.

நாடு முழுவதிலும் மத்திய அரசு, மாநில அரசுகள், வட்டார உள்ளாட்சி அமைப்புக்களின் அனைத்துப் பிரிவுகள், ஒரு இலட்சத்து 30000 வங்கிக் கிளைகள், இலட்சக்கணக்கான வங்கிப் பணியாளர்கள், ஒண்ணரை இலட்சத்துக்கும் மேற்பட்ட தபால் அலுவலகங்கள், ஒண்ணரை இலட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி முகவர்கள், இரவு பகலாக இந்தப் பணியில் ஈடுபட்டார்கள், அர்ப்பணிப்பு உணர்வோடு இதில் பங்கு கொண்டார்கள். பலவகையான அழுத்தங்களுக்கு இடையில், இவர்கள் அனைவரும் மிகவும் அமைதியான மனதோடு,இந்த நாட்டுப்பணியை ஒரு வேள்வியாகவே கருதி, ஒரு மகத்தான மாற்றம் ஏற்படுத்தும் ஒரு முயற்சி என்றே கருதி இதில் முழுமனதோடு ஈடுபட்டார்கள்.

காலையில் தொடங்கி, இரவு எப்போது நிறைவு செய்வார்கள் என்பது தெரியக் கூட செய்யாது, ஆனால் அனைவரும் செய்கிறார்கள். இதன் விளைவாகத் தான் பாரதம் இந்தப் பணியில் வெற்றி பெறும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தனை கஷ்டங்களுக்கு இடையேயும் கூட, வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் அனைவரும் பணியாற்றுகிறார்கள் என்பதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். மனித நேயம் என்ற விஷயம் வரும் போது, அவர்கள் சற்றுக் கூடுதலாகவே பயணித்துத் தான் செயல்பட்டு வருகிறார்கள். கண்டவா என்ற இடத்தில் ஒரு வயதானவருக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்று ஒருவர் என்னிடம் கூறினார். திடீரென்று பணம் தேவைப்பட்டது. அங்கே இருக்கும் வங்கிப் பணியாளர் கவனத்துக்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்ட போது, அவரே நேரில் முதியவர் இல்லம் சென்று பணத்தை சேர்ப்பித்து, சிகிச்சைக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் என்பதை அறிந்து எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட கணக்கே இல்லாத பல சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் டிவியில், ஊடகங்களில், செய்தித் தாள்களில், உரையாடல்களில் இடம் பெறுகின்றன. இந்த மகா வேள்வியில் உழைப்பவர்கள், பங்களிப்பு நல்குபவர்கள் என அனைத்துத் தோழர்களுக்கும் நான் என் இருதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சோதித்துப் பார்க்கும் போது தான் உண்மையான சக்தி என்ன என்பது புரிய வரும்.

பிரதம மந்திரியின் ஜன் தன் திட்ட இயக்கம் முழுவீச்சில் நடைபெற்று வந்த போது, வங்கிப் பணியாளர்கள் எப்படி அதை தங்கள் தோள்களில் சுமந்தார்கள், 70 ஆண்டுகளில் முடியாத ஒரு காரியத்தை சாதித்துக் காட்டினார்கள் என்பதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர்கள் தங்கள் திறமையை அப்போது வெளிப்படுத்தினார்கள். இன்று மீண்டும் ஒரு முறை அதே போன்றதொரு சவாலை அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள், 125 கோடி நாட்டுமக்களின் மனவுறுதி, அனைவரின் சமுதாய ரீதியிலான முனைப்பு, இந்த தேசத்தை ஒரு புதிய சக்தியாக உருமாற்றி சிறப்புறச் செய்யும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

ஆனால் தீயவை எந்த அளவுக்குப் பரவியிருக்கிறது என்றால், இன்றும் கூட சிலரிடமிருந்து தீய நடைமுறைகள் ஒரு பழக்கமாகிப் புரையோடி இருக்கின்றன. இப்போதும் கூட இந்த ஊழல் பணம், இந்த கருப்புப் பணம், கணக்கில் காட்டப்படாத இந்தப் பணம், பினாமிப் பணம், ஆகியவற்றை ஏதோ ஒரு வழியைத் தேடிப் பிடித்து உயிர்ப்பித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பணத்தைக் காபந்து செய்ய சட்ட விரோதமான செயல்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவர்கள் ஏழைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கும் செய்தி. ஏழைகளை மதி மயக்கி, ஆசை வார்த்தைகள் பேசி அல்லது மனதை மயக்கி, அவர்களின் கணக்குகளில் பணத்தைப் போட்டோ, அவர்களிடமிருந்து ஏதோ ஒரு வேலையை வாங்கிக் கொண்டோ, தங்கள் பணத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பேர்வழிகளிடம் நான் இன்று கூறிக் கொள்ள விரும்புவது ஒன்று தான் – திருந்துவதோ, திருந்தாமல் போவதோ உங்கள் இஷ்டம், சட்டத்தை மதித்து நடப்பதோ, நடக்காமல் இருப்பதோ உங்கள் இஷ்டம், என்ன செய்ய வேண்டும் என்பதை சட்டம் பார்த்துக் கொள்ளும். ஆனால் தயவு செய்து நீங்கள் ஏழைகளின் வாழ்கையோடு விளையாடாதீர்கள். பதிவுகளில் ஏழையின் பெயர் வந்து, பின்னர் புலனாய்வின் போது என் பிரியமான ஏழை உங்கள் பாவச்செயல் காரணமாகப் பிரச்சனையில் சிக்கும் வகையில் ஏதும் செய்யாதீர்கள். பினாமிச் சொத்துக்கள் தொடர்பாக மிகவும் கடுமையான சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது, இது அமலுக்கு வரவிருக்கிறது, அதில் நிறைய கஷ்டங்கள் ஏற்படும். நமது நாட்டுமக்களுக்கு எந்த விதமான கஷ்டமும் ஏற்படக் கூடாது என்பதையே அரசு விரும்புகிறது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷீஷ் அவர்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வாயிலாக ஊழல் மற்றும் கருப்புப் பணத்துக்கு எதிராகத்தொடுக்கப்பட்டிருக்கும் போர் பற்றி எனக்குத் தொலைபேசி வாயிலாக தெரிவித்தார், இதைப் பாராட்டினார் –
ஐயா வணக்கம், எனது பெயர் ஆஷீஷ் பாரே. நான் மத்திய பிரதேச மாநிலத்தின் ஹர்தா மாவட்டத்தில் இருக்கும் திராலி தாலுகாவின் திராலி கிராமத்தில் வசிக்கிறேன். நீங்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்களின் நாணய விலக்கல் செய்திருப்பது பாராட்டுக்குரியது. பல அசவுகரியங்களைப் பொறுத்துக் கொண்டும் கூட தேசத்தின் முன்னேற்றத்துக்காக இந்தக் கடுமையான முயற்சிக்கு மக்கள் ஆதரவளித்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் பல எடுத்துக்காட்டுகள் மூலமாக மனதின் குரலில் விளக்க வேண்டும் என்று விரும்புகிறேன்; இதனால் மக்களுக்கு ஒரு வகையில் உற்சாகம் அதிகரிக்கும், தேசத்தை உருவாக்கும் பணியில் ரொக்கமில்லா வழிமுறை மிகவும் அவசியமானது, நான் ஒட்டுமொத்த நாட்டோடு இசைந்திருக்கிறேன், நீங்கள் இந்த 500-1000 ரூபாய் நோட்டுக்கள் விலக்கி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது, என்று கூறியிருக்கிறார்.
இதே போல கர்நாடகத்தைச் சேர்ந்த யெல்லப்பா வேலான்கர் அவர்களும் தம் கருத்தைத் தெரிவித்திருந்தார் –
மோடிஜி வணக்கம், நான் கர்நாடக மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தின் ஒரு கிராமத்திலிருந்து பேசுகிறேன். உங்களுக்கு நான் என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், ஏனென்றால், நீங்கள் தானே நல்ல நாட்கள் பிறக்கும் என்று சொன்னீர்கள்; ஆனால் இத்தனை பெரிய முயற்சியை நீங்கள் மேற்கொள்வீர்கள் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மூலமாக கருப்புப் பணம் வைத்திருப்போர், ஊழல்வாதிகள் ஆகியோருக்கு நல்லதொரு பாடத்தை நீங்கள் புகட்டியிருக்கிறீர்கள். இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கா விட்டால், பாரதத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நல்ல காலம் எப்போதுமே ஏற்பட்டிருக்காது. இதற்காகவே நான் உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சில விஷயங்கள் ஊடகம் மூலமாக, மக்கள் வாயிலாக, அரசு தரப்புகளிலிருந்து கிடைக்கப் பெறும் போது பணியாற்ற உற்சாகம் அதிகரிக்கிறது. என் தேசத்தின் சாமான்ய பிரஜையிடம் என்ன ஒரு அற்புதமான திறன் இருக்கிறது என்பது தெரிய வரும் போது அளவில்லாத ஆனந்தமும், பெருமிதமும் உண்டாகிறது. மகாராஷ்ட்ரத்தின் அகோலாவில், தேசிய நெடுஞ்சாலை 6இல் ஒரு உணவு விடுதி இருக்கிறது. அவர்கள் ஒரு மிகப் பெரிய அறிவிப்புப் பலகையை வைத்திருக்கிறார்கள்; உங்கள் வசம் பழைய நோட்டு இருந்தால் கூட, நீங்கள் உணவு உண்ண விரும்பினால், பணம் பற்றி கவலைப் பட வேண்டாம், இங்கிருந்து பசியோடு மட்டும் திரும்பிச் செல்ல வேண்டாம், உணவை உண்டு விட்டே செல்ல வேண்டும், எப்போதாவது இந்தப் பாதையில் நீங்கள் பயணிக்க வேண்டி வந்தால், கண்டிப்பாக பணத்தை செலுத்துங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அங்கே மக்கள் செல்கிறார்கள், உணவு உண்கிறார்கள், 2-4-6 நாட்களுக்குப் பிறகு அந்த வழியாக மீண்டும் பயணிக்கும் போது, அவர்கள் பணத்தைத் திரும்பச் செலுத்துகிறார்கள். இது தான் என் தேசத்தின் சக்தி, இதில் சேவை மனப்பான்மை, தியாக உணர்வு ஆகியவை பளிச்சிடுகின்றன.
தேர்தல் காலத்தில் நான் தேநீர் வேளை உரையாடலில் ஈடுபட்டேன், உலகம் முழுவதிலும் இந்தக் கருத்து பரவியது. உலகின் பல நாட்டு மக்கள் தேநீர் வேளை உரையாடல் என்பதை சொல்லவும் தொடங்கி விட்டார்கள். ஆனால் இந்த தேநீர் வேளை உரையாடலின் போது திருமணங்கள் கூட நடைபெறும் என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது. நவம்பர் மாதம் 17ஆம் தேதி சூரத்தில் நடைபெற்ற ஒரு திருமணம், தேநீர் வேளை உரையாடலுடன் நடந்தது. குஜராத்தின் சூரத்தில் ஒரு பெண் தன் வீட்டு திருமணத்துக்காக வந்தவர்களுக்கு வெறும் தேநீர் மட்டுமே அருந்தக் கொடுத்தார், வேறு எந்த கொண்டாட்டங்களிலும் ஈடுபடவில்லை, எந்த விருந்துணவையும் படைக்கவில்லை, எதுவும் இல்லை – ஏனென்றால் நாணயவிலக்கல் காரணமாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. ஊர்வலத்தாரும் இதையே கௌரவம் என்று கருதினார்கள். சூரத்தின் பரத் மாரூ மற்றும் தக்ஷா பர்மார் – இவர்கள் தங்கள் திருமணம் வாயிலாக ஊழலுக்கு
எதிராக, கருப்புப் பணத்துக்கு எதிராக நடைபெற்று வரும் பெரும்போரில் தங்கள் பஙக்ளிப்பை நல்கியிருக்கிறார்கள், இதுவே பெரும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது. நவபரிணீத் பரத்துக்கும் தக்ஷாவுக்கும் பலப்பல ஆசிகள் அளிக்கும் அதே வேளையில், திருமண வைபவத்தைக் கூட ஒரு மஹா வேள்வியாக உருமாற்றி, ஒரு புதிய வாய்ப்பாக அதை ஆக்கியதற்காக உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற சங்கடங்கள் வரும் போது, மக்கள் அதற்கான தீர்வுகளையும் மிகச் சிறப்பாக அமைத்துக் கொள்கிறார்கள்.
தாமதமாக வீடு திரும்பிய வேளையில், ஒரு முறை டிவி செய்தியில் பார்க்க நேர்ந்தது. அசாம் மாநிலத்தின் தேகியாஜுலீ என்ற ஒரு சின்னஞ்சிறிய கிராமம் இருக்கிறது. தேயிலைத் தோட்டப் பணியாளர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு வாராந்திர அடிப்படையில் கூலி கிடைக்கிறது. இப்போது 2000 ரூபாய் நோட்டு கிடைத்திருக்கும் வேளையில் அவர்கள் என்ன செய்தார்கள்? அக்கம்பக்கத்தைச் சேர்ந்த 4 பெண்கள் ஒன்று கூடினார்கள், நால்வரும் ஒன்றாகச் சென்று பொருட்களை வாங்கினார்கள், 2000 ரூபாய் மூலமாக பணத்தை செலுத்தினார்கள், அவர்களுக்கு குறைவான மதிப்பு உடைய நாணயங்கள் தேவை இருக்கவில்லை, ஏனென்றால் நால்வருமாக இணைந்து பொருட்களை வாங்கினார்கள், அடுத்த வாரம் சந்திக்கலாம், அப்போது கணக்கு வழக்கைப் பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தார்கள். மக்கள் தங்களுக்குள்ளாகவே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இதில் ஏற்பட்ட மாற்றத்தை நீங்கள் கவனியுங்கள். எங்கள் பகுதிக்கு ஏ.டி.எம்.மைக் கொண்டு வாருங்கள் என்று அசாமின் தேயிலைத் தோட்டப் பணியாளர்கள் கோரிக்கை பற்றி அரசுக்கு தகவல் கிடைத்தது, கிராமப்புற மக்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றன பாருங்கள். இந்த இயக்கம் வாயிலாக சிலருக்கு உடனடியாக பலன் கிடைத்திருக்கிறது. தேசத்துக்கு இனிவரும் நாட்களில் பலன் கிட்டும், ஆனால் சிலருக்கு லாபம் உடனடியாக வசப்பட்டிருக்கிறது. நடந்திருப்பவை பற்றி நான் கேட்ட போது, சின்னச்சின்ன நகரங்களிலிருந்து சில தகவல்கள் எனக்குக் கிடைக்கப் பெற்றன.

சுமார் 40-50 நகரங்கள் தொடர்பானதகவல்கள் எனக்குக் கிடைத்தன, இந்த நாணய விலக்கல் காரணமாக பழைய பாக்கிகள் எல்லாம் வசூலாயின, வரி ஏய்ப்பு செய்தவர்கள் – தண்ணீர் மீதான வரி, மின்சாரம் மீதான வரி போன்றவற்றை செலுத்தாதவர்கள் பற்றி உங்களுக்கே நன்றாகத் தெரியும் – ஏழை பாழைகள் எல்லாம் 2 நாட்கள் முன்னதாகவே சென்று செலுத்தி விடும் பழக்கத்தை மேற்கொண்டிருப்பார்கள். சக்தி படைத்தவர்கள், சட்டத்தின் கரங்களுக்கு அப்பால் இருப்பவர்கள், அவர்களைக் கேள்வி கேட்பார் யாரும் இல்லை, அவர்கள் தான் பணத்தை செலுத்துவதே இல்லை. அவர்கள் கணக்கில் ஏகப்பட்ட பாக்கி இருக்கும். ஒவ்வொரு நகராட்சியும் மிகவும் சிரமப்பட்டு 50 சதவீதத் தொகையையே ஈட்டுகிறது. ஆனால் இந்த முறை 8ஆம் தேதியின் இந்த தீர்மானம் காரணமாக, அனைவரும் தங்கள் பழைய நோட்டுக்களை செலுத்த ஓடோடி வந்தார்கள். 47 நகர அலகுகளில் கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் சுமார் 3000-3500 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது. இந்த ஒரு வாரக்காலத்தில் மட்டும் அவர்களுக்கு 13000 கோடி ரூபாய் பணம் வசூலாகி இருக்கிறது என்ற தகவல் உங்களுக்கு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் ஒருசேர அளிக்கலாம். 3000-3500 கோடி ரூபாய் எங்கே, 13000 கோடி எங்கே!! அதுவும் நேரடியாக வந்து செலுத்தியிருக்கிறார்கள். இப்போது இந்த நகராட்சிகளுக்கு 4 மடங்குப் பணம் வந்திருப்பதால், ஏழை மக்களுக்காக கழிவுநீர் அமைப்புக்கள் ஏற்படுத்தப்படுவதோ, நீர் வழங்கல் அமைப்புக்கள் உருவாக்கப்படுவதோ, ஆங்கன்வாடி மையங்கள் நிறுவப்படுவதோ இயல்பாகவே அமையும் இல்லையா? நேரடிப் பயன்கள் கண்ணுக்குத் தெரியும் வகையில் ஏற்பட்டிருக்கும் இப்படிப்பட்ட பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.
சகோதர சகோதரிகளே, நமது கிராமங்கள், நமது விவசாயிகள், இவர்கள் நம் நாட்டின் பொருளாதாரத்தின் பலமான தூண்கள். ஒரு புறம் பொருளாதாரத்தின் இந்த புதிய மாற்றம் காரணமாக, இடர்களுக்கு இடையே, ஒவ்வொரு குடிமகனும் அதற்கேற்ப தன்னைத் தானே சீர்செய்து கொண்டு வருகிறார். ஆனால் நான் என் தேச விவசாயிகளுக்கு இன்று சிறப்பாக என் வணக்கங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இப்போது தான் நான் இந்தப் பருவத்தின் விதைப்பு
தொடர்பான புள்ளி விபரங்கள் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன். கோதுமையாகட்டும், பருப்பு வகைகளாகட்டும், எண்ணெய்ப் பயிர்கள் ஆகட்டும், நவம்பர் 20ஆம் தேதி வரை என்னிடம் கணக்கு இருக்கிறது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடும் போது, விதைப்பு அதிகரித்திருக்கிறது. கஷ்டங்களுக்கு இடையேயும், விவசாயிகள் ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அரசுமே கூட பல முக்கியமான தீர்மானங்களை மேற்கொண்டிருக்கிறது, இதில் விவசாயிகளுக்கும், கிராமங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகும் கூட கஷ்டங்கள் இருக்கின்றன என்றாலும், இயற்கை இடர்களாகட்டும், எந்த ஒரு இன்னலாகட்டும் அவற்றை சகித்துக் கொண்டு உறுதியாக சமாளிக்கும் நமது விவசாயி, இந்த முறையும் மனவுறுதியோடு இதை எதிர்கொண்டிருக்கிறார்.
நமது நாட்டின் சிறிய வியாபாரிகள் வேலைவாய்ப்பையும் அளிக்கிறார்கள், பொருளாதார செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறார்கள். கடந்த வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் நாங்கள் ஒரு மகத்துவம் நிறைந்த முடிவைச் செய்தோம்; பெரிய பெரிய mallகளைப் போலவே, கிராமங்களில் உள்ள சின்னச் சின்ன கடைகளும் கூட 24 மணி நேர வியாபாரம் செய்ய முடியும், எந்த சட்டமும் அவர்களுக்குத் தடை விதிக்காது. ஏனென்றால், பெரிய பெரிய mallகளுக்கு எல்லாம் 24 மணி நேரம் திறக்க வாய்ப்பு கிடைக்கும் போது, கிராமத்தின் ஏழை கடைக்காரருக்கு ஏன் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்க கூடாது என்பது என் கருத்தாக இருந்தது. முத்ரா திட்டத்தின்படி அவர்களுக்கு கடன் அளிக்கும் விதமாக முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. பல கோடிக்கணக்கான ரூபாய் முத்ரா திட்டத்தின் படி எளிய மக்களுக்கு அளிக்கப்பட்டது, ஏனென்றால் இது போன்ற சிறு தொழில்களில் கோடிக்கணக்கான பேர் ஈடுபட்டு வருகிறார்கள், பல இலட்சம் கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரத்துக்கான வேகத்தை அளிக்கிறார்கள். ஆனால் இந்த தீர்மானம் காரணமாக அவர்களுக்கும் சிரமங்கள் ஏற்படுவது என்பது
இயல்பான ஒன்று தான்; இப்படிப்பட்ட நிலையிலும், நமது இந்த சிறு வியாபாரிகளும் கூட தொழில்நுட்பம் வாயிலாக, mobile app வாயிலாக, மொபைல் வங்கி வாயிலாக, கடன் அட்டை வாயிலாக, தங்கள் தங்கள் வழிமுறைகள் மூலம் நுகர்வோர் சேவையில் ஈடுபட்டு வருவதையும், நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருவதையும் என்னால் பார்க்க முடிந்தது.
இன்று நான் எனது சிறு வணிகம் செய்யும் சகோதர சகோதரிகளிடம் கூற விரும்புவதெல்லாம், இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி நீங்கள் டிஜிட்டல் உலகில் நுழையுங்கள். நீங்களும் உங்கள் மொபைல் ஃபோன் மூலமாக வங்கிகளின் appஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கடன் மற்றும் பற்று அட்டைகளின் பரிவர்த்தனைகளுக்கான விற்பனை முக (Point of Sale) இயந்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் எப்படி ரொக்கப் பணத்தைக் கையாளாமல் வியாபாரம் செய்வது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். எப்படி பெரிய mallகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கிறார்களோ, அதைப் போல, ஒரு சிறிய வியாபாரியும், எளிமையான பயனாளிக்கு நேசமான தொழில்நுட்பம் வாயிலாக, தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும். இதில் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை, சிறப்பான வாழ்க்கையே ஏற்படும். ரொக்கப் பணப்பரிவர்த்தனை இல்லா சமுதாயத்தை உருவாக்க உங்கள் பங்களிப்பு மிகப் பெரியதாக இருக்க முடியும், நீங்கள் உங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள, மொபைல்போன் மூலமாக மொத்த வங்கிச் செயல்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும், இன்று நோட்டுக்களை கையாளாமல், வியாபாரத்தை பல வழிகளில் நம்மால் நடத்த முடியும். தொழில்நுட்ப வழிகள் இருக்கின்றன, அவை பாதுகாப்பானவை, விரைவானவை. நீங்கள் இந்த இயக்கம் வெற்றி பெற உங்கள் ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என்று மட்டும் நான் விரும்புகிறேன்.

இது மட்டுமல்ல, மாற்றத்தை நீங்கள் தான் தலைமையேற்றி நடத்திச் செல்ல வேண்டும், இப்படிப்பட்ட தலைமையை உங்களால் அளிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒட்டுமொத்த கிராமத்தின் வியாபாரத்தையும் நீங்கள் இந்தத் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உழைப்பாளி சகோதர சகோதரிகளிடத்திலும் நான் கூற விரும்புவது, உங்களுக்கு அதிக அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பது தான். காகிதத்தில் குறிக்கப்பட்டிருக்கும் ஊதியம் ஒன்று, உங்கள் கைகளில் கொடுக்கப்படும் தொகையாக வேறு என்ற நிலைமை ஒன்று. எப்போதாவது மொத்த ஊதியமும் கைகளில் கிடைத்தாலும், வெளியே ஒருவர் நின்று கொண்டிருப்பார், அவருக்கு ஒரு பங்கை உங்கள் ஊதியத்திலிருந்து கொடுக்க வேண்டி இருக்கும், பலவந்தமாக இப்படிப்பட்ட கொடுமை நிறைந்த வாழ்க்கையை வாழும் நிலைக்கு கூலித் தொழிலாளி தள்ளப் படுகிறார். இந்த புதிய வழிமுறை வாயிலாக, வங்கிகளில் உங்களுக்கென ஒரு கணக்குத் தொடங்கப்பட்டு, உங்கள் ஊழியத் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் என்ற விதிமுறை பின்பற்றப்படுவதை இதன் மூலம் உறுதி செய்ய முடியும். உங்களுக்கு உங்கள் ஊதியம் முழுக்க கிடைக்க வேண்டும், யாருக்கும் பங்கு கொடுக்க வேண்டியிருக்காது. உங்கள் மீது கொடுமை இழைக்கப்படக் கூடாது. உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேர்ந்து விட்டால், நீங்களுமே கூட ஒரு சின்ன மொபைல்போன் மூலமாக, அக்கம்பக்கக் கடைகளில் பொருள் வாங்க முடியும், அதன் மூலமாகவே பணத்தை செலுத்தி விடவும் முடியும்; இதற்கு எந்த ஸ்மார்ட் போனும் தேவையில்லை, இப்போதெல்லாம் உங்கள் மொபைல் போனே கூட ஈ-வேலட் என்ற வகையில் உங்கள் பர்ஸ் செய்யும் வேலையைச் செய்து விடுகிறது. ஆகையால் என் உழைப்பாளி சகோதர சகோதரிகளே,இந்தத் திட்டத்தில் உங்கள் பங்களிப்பை நான் சிறப்பாக வேண்டுகிறேன், ஏனென்றால் இத்தனை பெரிய ஒரு முடிவை நான் நாட்டின் ஏழைகளுக்காக, விவசாயிகளுக்காக, தொழிலாளிகளுக்காக, நசுக்கபட்டவர்களுக்காக, உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்காக, பாதிக்கப்பட்டவர்களுக்காக, அவர்களுக்கு நலன்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மேற்கொண்டிருக்கிறேன்.
இன்று நான் விசேஷமாக இளைஞர்களோடு உரையாட விரும்புகிறேன். பாரதத்தில் 65 சதவீதத்தினர் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று உலகம் முழுக்க தண்டோரா போட்டு வருகிறோம். நீங்கள் என்னாட்டின் இளைஞர்கள், யுவதிகள், நான் எடுத்திருக்கும் இந்த முடிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதை நான் நன்கறிவேன். நீங்கள் இந்த முடிவை முழுமையாக ஆதரிக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். இதை ஆக்கபூர்வமான வழிகளில் முன்னெடுத்துச் செல்ல பெருமளவு பங்களிப்பு அளித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் நான் அறிவேன். தோழர்களே, நீங்கள் தான் எனது உண்மையான சிப்பாய்கள், நீங்களே என் உண்மைத் தோழர்கள். அன்னை பாரத மாதாவுக்கு சேவை செய்ய ஒரு அற்புதமான வாய்ப்பு நம் அனைவருக்கும் வாய்த்திருக்கிறது, இது தேசத்தைப் பொருளாதார சிகரங்களை நோக்கிக் கொண்டு செல்லும் பொன்னான வாய்ப்பு. எனது இளைய சமுதாய நண்பர்களே, உங்களால் எனக்கு உதவி செய்ய இயலுமா? எனக்கு துணை நிற்பதோடு மட்டும் வேலை முழுமை பெறாது. இன்றைய உலக நடைமுறை பற்றி உங்களுக்கு இருக்கும் அளவுக்கு, முந்தைய தலைமுறையினருக்கு இல்லை. ஏன், உங்கள் குடும்பத்திலேயே கூட உங்கள் மூத்த சகோதரருக்கு, உங்கள் தாய் தந்தையருக்கு, சித்தப்பா சித்திகளுக்கு, மாமா மாமிகளுக்கு உங்கள் அனுபவம் இல்லாமல் இருக்கலாம். App, அதாவது செயலி என்றால்
என்ன என்பதை நீங்கள் நன்கறிவீர்கள், ஆன்லைன் பேங்கிங், அதாவது கணிணி மூலம் வங்கியலுவல் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள், கணிணி மூலம் பயணச்சீட்டுப் பதிவு ஆகியவற்றை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு இந்த விஷயங்கள் மிக எளிமையானவை, நீங்கள் இவற்றைப் பயன்படுத்தவும் செய்கிறீர்கள். ஆனால் இன்று நாடு செய்ய விரும்பும் மகத்தான பணி, நமது கனவான ரொக்கப் பணப்பரிவர்த்தனை இல்லா சமுதாயம். நூறு சதவீதம் ரொக்கப் பரிவர்த்தனை இல்லா சமுதாயம் என்பது சாத்தியமல்ல என்பது சரி தான். ஆனால் ஏன் நாம் பாரதத்தை குறைந்த ரொக்கப் பயன்பாட்டு சமுதாயமாக ஆக்க ஒரு தொடக்கத்தைச் செய்யக் கூடாது. ஒரு முறை நீங்கள் இந்தக் குறைந்த ரொக்கப் பயன்பாட்டு சமூகம் என்பதைத் தொடங்கி விட்டால், ரொக்கப் பரிவர்த்தனையே இல்லாத சமூகம் என்ற இலக்கு தொலைவில் இருக்காது. எனக்கு இந்த விஷயத்தில் உங்கள் உடல்ரீதியான உதவி, உங்கள் நேரம், உங்கள் உறுதிப்பாடு ஆகியன தேவை. நீங்கள் எப்போதும் எனக்கு ஏமாற்றம் அளிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது; ஏனென்றால், நாம் அனைவரும் இந்துஸ்தானத்தின் ஏழையின் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற ஆசையை மனதில் சுமந்து கொண்டிருப்பவர்கள். ரொக்கப் பணப் பரிவர்த்தனை இல்லா சமூகத்தை ஏற்படுத்த, டிஜிட்டல் வங்கி சேவையை அறிமுகப்படுத்த அல்லது மொபைல் வங்கிச் சேவையை அறிமுகப்படுத்த இன்று எத்தனை வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு வங்கியும் ஆன்லைன் வசதியை அளிக்கிறது. ஹிந்துஸ்தானத்தின் ஒவ்வொரு வங்கியிடமும் பிரத்யேகமான ஒரு மொபைல் app இருக்கிறது, ஒவ்வொரு வங்கியிடமும் பிரத்யேகமான வாலட் இருக்கிறது. வாலட்டின் நேரடிப் பொருள் e-purse. பலவகையான அட்டைகள் கிடைக்கின்றன. ஜன் தன் திட்டத்தின்படி பாரதத்தின் கோடிக்கணக்கான ஏழைக் குடும்பங்களிடம் ரூபே அட்டை இருக்கிறது,
மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டு வந்த ரூபே அட்டை, 8ஆம் தேதிக்குப் பிறகு, அதிகமாகப் பயன்படத் தொடங்கி விட்டது, சுமாராக 300 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. மொபைல் போனில் வரும் prepaid அட்டையைப் போலவே வங்கிகளிடமும் பணத்தை செலவு செய்ய prepaid அட்டை கிடைக்கிறது. வியாபாரம் செய்ய ஒரு அருமையான தளம் UPI, இதன் மூலமாக நீங்கள் பொருட்களை வாங்கவும் முடியும், பணத்தை அனுப்பவும் முடியும், பணத்தைப் பெறவும் முடியும். இந்தப் பணி நீங்கள் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்புவதைப் போல அத்தனை எளிமையானது. எந்தப் படிப்பும் இல்லாதவருக்குக் கூட இன்று வாட்ஸ்அப்பில் தகவல் எப்படி அனுப்ப வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார், எப்படி ஃபார்வர்ட் செய்ய வேண்டும் என்று அறிந்து வைத்திருக்கிறார். இது மட்டுமல்லாமல், இந்த வேலைக்கு பெரிய ஸ்மார்ட் போன் எல்லாம் தேவை என்றில்லாத அளவுக்கு தொழில்நுட்பம் மிகவும் எளிமையானதாக இருக்கிறது. சாதாரண வசதிகள் கொண்ட போன் மூலமாகக் கூட பணப் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். சலவைத் தொழிலாளி, காய்கறி விற்பனையாளர், பால் விற்பனையாளர், செய்தித்தாள் விற்பனையாளர், தேநீர்க்கடைக்காரர், பலகாரம் விற்பனை செய்பவர் என யாராக இருந்தாலும் இதை எந்தச் சிரமமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் இந்த வழிமுறையை மேலும் சுலபமாக்கும் முயற்சிகளுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறேன். அனைத்து வங்கிகளும் இதில் ஈடுபட்டிருக்கின்றன, செய்து கொண்டிருக்கின்றன. இப்போது நாங்கள் ஆன்லைன் வர்த்தகத்திற்கான கூடுதல் கட்டணத்தையும் ரத்து செய்து விட்டோம். மேலும், ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத சமூகம் என்ற கருத்துக்கு வலு சேர்க்க, அட்டை தொடர்பான இது போன்ற வரிகளையெல்லாம் முடிவுக்குக் கொண்டு வந்து விட்டோம், இதை நீங்கள் கடந்த 2-4 நாட்களுக்குள்ளான செய்தித்தாள்களில் பார்த்திருக்கலாம்.
எனது இளைய நண்பர்களே, இவையனைத்தும் ஆன பிறகும் ஒரு தலைமுறை முழுவதுக்கும் இது பரிச்சயமில்லாததாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் இந்த மகத்தான பணியில் ஆக்கப்பூர்வமாக இணைந்திருக்கிறீர்கள் என்பதை நான் நன்கறிவேன். WhatsAppல் படைப்பாற்றல் மிக்க செய்திகளை நீங்கள் அளித்தல், கோஷங்கள், கவிதைகள், துணுக்குகள், கார்ட்டூன்கள், புதிய புதிய கற்பனை, நகைச்சுவை என அனைத்தையும் நான் கவனித்து வருகிறேன்; சவால்களுக்கு இடையேயும் நமது இளைய சமுதாயத்தினரின் படைப்புத் திறனைப் பார்க்கும் போது எனக்கு என்ன படுகிறது என்றால், போர்க்களத்தில் கூட ஒரு காலத்தில் கீதை பிறந்தது என்பது தான் இந்த பாரத பூமியின் விசேஷம் என்பதைப் போல, இன்று இத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் காலத்தை நாம் சந்திக்கும் வேளையில் உங்களுக்குள்ளே ஒரு அடிப்படையான படைப்பாற்றல் வெளிப்படுவதை நான் பார்க்கிறேன். ஆனால் எனக்குப் பிரியமான இளைய தோழர்களே, நான் மீண்டும் ஒரு முறை கூறுகிறேன், எனக்கு இந்தப் பணியில் உங்கள் உதவி தேவைப்படுகிறது. ஆம், ஆம் ஆம், நான் மீண்டும் ஒரு முறை கூறுகிறேன், எனக்கு உங்கள் உதவி தேவை, நீங்கள், இந்த தேசத்தின் கோடிக்கணக்கான இளைஞர்கள் இந்தப் பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பீர்கள் என்று இன்று முதல் உறுதி பூணுங்கள். உங்கள் மொபைல் ஃபோனில் ஆன்லைன் செலவுகளுக்கான அனைத்துத் தொழில்நுட்பத்தையும் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இது மட்டுமில்லாமல், ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என உங்களால் எத்தனை நேரம் அளிக்க முடியுமோ, குறைந்த பட்சம் 10 குடும்பங்களுக்கு நீங்கள் இந்த தொழில்நுட்பம் பற்றிய விபரங்கள், இதை எப்படி பயன்படுத்த வேண்டும், எப்படி தத்தமது வங்கிகளின் Appஐ தரவிறக்கம் செய்யமுடியும், தங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை செலவு செய்யும் வழிமுறை என்ன, எப்படி கடைக்காரருக்குப் பணம் கொடுக்க முடியும் என்று கற்றுக் கொடுங்கள். அதே போல கடைக்காரருக்கும் இந்த வழிமுறையில் எப்படி வியாபாரம் செய்ய முடியும் என்பதைப் புரிய வையுங்கள். ரொக்கப் பணப் பரிவர்த்தனையில்லாத சமூகம், நோட்டுக்களின் வலையிலிருந்து வெளிவரும் பேரியக்கம், நாட்டை ஊழலிலிருந்து விடுவிக்கும் இயக்கம், கருப்புப் பணத்திலிருந்து விடுதலை அளிக்கும் இயக்கம், மக்களுக்கு இடர்கள் பிரச்சனைகளிலிருந்து சுதந்திரம் அளிக்கும் இயக்கம் – இவற்றுக்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டும்.

ஒரு முறை மக்களுக்கு Rupay அட்டையின் பயன் எப்படி இருக்கிறது என்பதை நீஙக்ள் கற்றுக் கொடுத்து விட்டால், ஏழை உங்களுக்கு ஆசிகள் அளிப்பார். சாதாரண குடிமகனுக்கு நீங்கள் இந்த வழிமுறைகளைக் கற்றுக் கொடுத்து விட்டீர்கள் என்றால், அனைத்துக் கவலைகளிலிருந்தும் விடுதலை பெற்று விடலாம் இந்தப் பணியில் இந்துஸ்தானத்தின் அனைத்து இளைஞர்களும் ஈடுபட்டார்களேயானால், இதை செய்து முடிக்க அதிக காலம் பிடிக்காது என்பது எனக்குத் தெரியும். ஒரே மாதத்திற்குள்ளாக, நம்மால் ஒரு புதிய ஹிந்துஸ்தானமாக நிமிர்ந்து நிற்கச் செய்ய முடியும், இந்தப் பணியை நீங்கள் உங்கள் மொபைல் ஃபோன் மூலமாக உங்களால் செய்ய முடியும்; தினமும் பத்து வீடுகளுக்குச் செல்லுங்கள், தினமும் 10 வீடுகளை இதில் இணையுங்கள். நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன், வாருங்கள், உங்கள் ஆதரவு மட்டும் போதாது, நாம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் களவீரர்களாக மாறுவோம், மாற்றத்தை ஏற்படுத்தியே தீருவோம். தேசத்துக்கு கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றிலிருந்து விடுதலை அளிக்கும் இந்தப் போரில் நாம் முன்னேறுவோம். இளைஞர்கள் நாட்டின் போக்கையே மாற்றியமைத்த நாடுகள் உலகிலே உண்டு; அதே போல யார் மாற்றத்தைக் கொண்டு வருகிறாரோ, அவர் இளைஞராகவே இருப்பார், யார் புரட்சியைஏற்படுத்துகிறாரோ அவர் இளைஞராகத் தான் இருப்பார் என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். கீன்யா சவாலை ஏற்றுக் கொண்ட வகையில், M-PESA என்ற ஒரு மொபைல் அமைப்பினை புகுத்தியது, தொழில்நுட்பப் பயன்பாட்டினை ஏற்படுத்தியது, M-PESA என்ற பெயரிட்டது. இன்று கிட்டத்தட்ட ஆப்பிரிக்காவின் இந்தப் பகுதியில் கீன்யாவின் அனைத்துப் பரிவர்த்தனைகளும் இதன் மூலம் நடைபெறக் கூடிய அளவுக்கு தயாராகி விட்டது. இந்த நாடு ஒரு மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
என் நெஞ்சம் நிறைந்த இளைஞர்களே, நான் மீண்டும் ஒரு முறை, மீண்டும் ஒரு முறை உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு பள்ளியும், கல்லூரியும், பல்கலைக்கழகமும், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியன சமுதாய அளவில், தனிப்பட்ட முறையில் என இந்தப் பணியில் ஈடுபட உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். நாம் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்வோம். நாட்டுக்கு மிக உன்னதமான சேவை செய்ய நமக்கெல்லாம் ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது, இந்த நல்வாய்ப்பை, பொன்னான வாய்ப்பை நழுவ விடக் கூடாது.
என் இனிய சகோதர சகோதரிகளே, நாட்டின் ஒரு மகத்தான கவிஞர், ஹரிவன்ஷ்ராய் பச்சன் அவர்களின் பிறந்த நாள் இன்று. ஹரிவன்ஷ்ராய் அவர்களின் பிறந்த நாளான இன்று, அமிதாப் பச்சன் அவர்கள் தூய்மை இயக்கத்துக்கான ஒரு கோஷத்தை அளித்திருக்கிறார். இந்த நூற்றாண்டின் அதிகம் விரும்பப்படும் கலைஞரான அமிதாப் அவர்கள், தூய்மை இயக்கத்தை மிகுந்த முனைப்போடு முன்னெடுத்துச் செல்வதை நீங்கள் கவனித்திருக்கலாம். அவரது நாடி நரம்புகளிலெல்லாம் தூய்மை தொடர்பான விஷயம் பரவி விட்டது போலத் தோன்றுகிறது; இதனால் தான் தனது தந்தையாரின்
பிறந்த நாளன்று கூட, அவருக்கு தூய்மை பற்றிய நினைவு எழுகிறது. ஹரிவன்ஷ்ராய் அவர்களின் ஒரு கவிதையின் சரணங்களைத் தான் எழுதுவதாய் அவர் கூறுகிறார் – மக்கி மறையும் உடல், மயக்கத்தில் ஆழும் மனம், கணநேர வாழ்க்கை, இதுவே என் அடையாளம். ஹரிவன்ஷ்ராய் அவர்கள் இந்த வரியின் வாயிலாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். மக்கி மறையும் உடல், மயக்கத்தில் ஆழும் மனம், கணநேர வாழ்க்கை, இதுவே என் அடையாளம், என்பதை அடியொற்றி அவரது அருமந்த மகனான அமிதாப் அவர்கள், தூய்மையான உடல், தூய்மையான மனம், தூய்மையான பாரதம், இதுவே என் அடையாளம் என்று எழுதுகிறார். நான் ஹரிவன்ஷ்ராய் அவர்களுக்கு என் மரியாதை கலந்த வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன். அமிதாப் அவர்கள் இது போல மனதின் குரலில் இணைவதற்கும், தூய்மைப் பணியை முன்னெடுத்து வழிநடத்திச் செல்வதற்கும் நான் என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
என் உளம் நிறைந்த நாட்டுமக்களே, இப்போது மனதின் குரல் வாயிலாக உங்கள் எண்ணங்கள், உங்கள் உணர்வுகள் ஆகியன, உங்கள் கடிதங்கள் வாயிலாகவும், myGovஇலும், narendramodiappஇலும் தொடர்ந்து என்னை உங்களோடு இணைத்து வைக்கிறது. இப்போது 11 மணிக்கு மன் கீ பாத் (மனதின் குரல்) ஒலிபரப்பாகும், ஆனால் மாநில மொழிகளில், இது நிறைவடைந்த உடனேயே தொடங்கி விடும். அகில இந்திய வானொலியைச் சேர்ந்தவர்கள் இந்த முனைப்பை மேற்கொண்டிருப்பதற்கு நான் அவர்களுக்குக் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்; எங்கெல்லாம் இந்தி மொழி புழக்கத்தில் இல்லையோ, அங்கே இருக்கும் என் நாட்டு மக்களுக்கும் இதோடு இணைந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.

Monday 28 November 2016

சில்லறை தட்டுப்பாட்டால் காய்கறி வாங்க ஆளில்லை: சிறு வியாபாரிகள் கடும் பாதிப்பு

சென்னையில் சில்லறை ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருவதால் காய்கறிகள் விற்பனை குறைந்து வருகிறது. இதனால் சில்லறை காய்கறி வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோயம்பேடு சந்தையில் தினமும் ரூ.5 கோடி அளவில் காய்கறிகள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்று, மளிகை கடைகள் மற்றும் சிறு சந்தைகள், சாலையோரக் கடைகளில் விற்பனை செய்கின்றனர். கடந்த 10 நாட்களாக சில்லறை ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், சில்லறை காய்கறி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தொழிலை நம்பியுள்ளோர் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
வியாசர்பாடியில் சாலையோரம் சில்லறை விலையில் காய்கறி வியாபாரம் செய்து வரும் ரோசி என்பவர் இதுபற்றி கூறும்போது, “தினமும் ரூ.20 ஆயிரம் வரை காய்கறி வியாபாரம் நடக்கும். கடந்த 10 நாட்களாக ரூ.5 ஆயிரத்துக்குகூட வியாபாரம் நடைபெறவில்லை. வருவாய் இழப்பு காரணமாக இந்த மாதத்துக்கான மாதச்சீட்டு தொகை, கடன் போன்றவற்றை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காய்கறி வாங்க வருவோரெல்லாம் பழைய 500 ரூபாய் நோட்டு அல்லது புதிய 2000 நோட்டுகளைத்தான் கொண்டு வந்து நீட்டுகின்றனர். எங்களால் சில்லறை கொடுக்க முடியவில்லை. இதனால் வியாபாரம் குறைந்துள்ளது” என்றார்.
ஜாம்பஜாரில் கடை வைத்திருக் கும் முகமது அலி என்பவர் கூறும்போது, “தினமும் ரூ.5 ஆயிரம் வரை வியாபாரம் நடைபெறும். தற்போது ரூ.2 ஆயிரத்துக்குகூட வியாபாரம் நடைபெறவில்லை. பொதுமக்கள் வரத்தும் குறைந்துவிட்டது. லாபத்தை குறைத்துக்கொண்டு காய்கறிகளை மலிவாக விற்றாலும் வாங்க ஆள் இல்லை” என்றார்.
மொத்தத்தில் சென்னையில் காய்கறி வியாபாரம் குறைந்து, அதை நம்பி அத்தொழிலில் ஈடுபட்டும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

Sunday 27 November 2016

ஜன்தன் கணக்குகளில் ரூ.64,250 கோடி குவிந்தது

ஜன்தன் வங்கிக் கணக்குகளில் இதுவரை ரூ.64,252 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதும் வங்கிக் கணக்கு இல்லாத ஏழைகள் பயன்பெறும் வகையில் ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தில் நாடு முழுவதும் 25.51 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன.
இது 'ஜீரோ பேலன்ஸ்' வங்கிக் கணக்கு என்பதால் பெரும்பான் மையான வங்கிக் கணக்கு களில் பணம் டெபாசிட் செய்யப் படவில்லை. ஒட்டுமொத்த ஜன்தன் வங்கிக் கணக்குகளில் கடந்த 8-ம் தேதி வரை ரூ.45,636 மட்டுமே இருந்தது.
இந்நிலையில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து ஜன்தன் வங்கிக் கணக்குகளில் பெருந்தொகை குவிந்து வரு கிறது. இந்த வங்கிக் கணக்கு களில் இதுவரை ரூ.64,252.15 கோடி முதலீடு செய்யப்பட்டுள் ளது. இதில் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 3.79 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளில் ரூ.10,670.62 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
மேற்குவங்கத்தில் 2.44 கோடி வங்கிக் கணக்குகளில் ரூ.7,826.44 கோடி, ராஜஸ்தானில் 1.89 கோடி வங்கிக் கணக்குகளில் ரூ.5,345.57 கோடி, பிஹாரில் 2.62 கோடி வங்கிக் கணக்குகளில் ரூ.4,912.79 கோடி முதலீடு குவிந்துள்ளது
இந்தத் தகவலை மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் மக்களவையில் நேற்று தெரிவித்தார்.
ஜன்தன் வங்கிக் கணக்குகளில் ரூ.50,000-க்கு மேல் வரவு வைக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இவ்வளவு தொகை குவிந்துள்ளது. எனவே சந்தேகத் துக்குரிய வங்கிக் கணக்குகள் குறித்து வருமான வரித் துறை விசாரணை நடத்தும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவு

கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 90.
கியூபாவில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. அமெரிக்க ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். சோவியத் யூனியன் பாணியில் கம்யூனிஸத்தை ஆதரித்தவர் காஸ்ட்ரோ. புரட்சி மூலம் கியூபாவின் ஆட்சியைப் பிடித்த காஸ்ட்ரோ, கடந்த 1959-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். அதன்பிறகு, 2008-ம் ஆண்டு வரை கியூபா அதிபராக இருந்தார். சுமார் 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தார். உலகிலேயே அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த தலைவர் என்ற பெருமையும் இவருக்குள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகிய ஃபிடல் காஸ்ட்ரோ, தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவை கியூபா அதிபராக்கினார். அதன்பின் அவரது உடல்நிலை வயது பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அவர் காலமானார். இத்தகவலை அதிபர் ரவுல் காஸ்ட்ரோ கியூபா அரசு தொலைக்காட்சியில் தழுதழுத்த குரலில் அறிவித்தார். ரவுல் கூறும்போது, ‘‘வெள்ளிக்கிழமை இரவு 10.29 மணிக்கு கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ காலமாகி விட்டார்’’ என்றார். கடந்த 2008-ம் ஆண்டு முதல் 8 ஆண்டுகள் உடல்நலம் குன்றியிருந்த ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக கியூபாவின் அதிபராக பதவி வகித்த பிடல் காஸ்ட்ரோ கடந்து வந்த பாதை இதுதான்:
1926, ஆகஸ்ட் 13: கிழக்கு கியூபாவில் உள்ள பிரனில் ஸ்பெயின் நிலச்சுவாந்தாருக்கும், கியூபா தாய்க்கும் 3-வது குழந்தையாக பிறந்தார். பள்ளிப் பருவத்தில் சிறந்த மாணவராக திகழ்ந்தார்.
1953, ஜூலை 26: கியூபாவின் ராணுவப் படைகளுக்கு எதிராக பிடல் காஸ்ட்ரோ தொடுத்த தாக்குதல் தோல்வியில் முடிந்தது. ஆதரவாளர்களுடன், காஸ்ட்ரோவும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்.
1956, டிசம்பர் 2: மெக்ஸிகோவில் இருந்து தப்பியதும் 81 போராளிகளுடன் கிரான்மா என்ற கப்பல் மூலம் தென்கிழக்கு கியூபாவுக்கு வந்தடைந்தார். பின்னர் சியாரா மெஸ்டிரா மலைகளில் இருந்தபடி 25 மாதங்கள் ராணுவத்துக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கினார்.
1959, ஜனவரி 1: ராணுவ சர்வாதிகாரி பல்ஜெனிசியோ படிஸ்டா நாட்டை விட்டு தப்பியோடினார். பின்னர் ஜனவரி 8-ம் தேதி காஸ்ட்ரோ வெற்றி உற்சாகத்துடன் நாட்டுக்குள் நுழைந்தார். பிப்ரவரியில் கியூபாவின் பிரதமராக பதவியேற்றார்.
1959, ஏப்ரல் 15-27: அமெரிக்காவில் அதிபர் ரிச்சர்டு நிக்ஸனை சந்தித்தார்.
1960: சோவியத் யூனியனுடன் ராஜாங்க ரீதியிலான உறவை நிர்மாணித்தார்.
1961: கியூபாவுடனான ராஜாங்க உறவுகளை அமெரிக்கா முறித்துக் கொண்டது.
1961, ஏப்ரல் 17-19: அமெரிக்க ஆதரவுடன் பே ஆப் பிக்ஸ் பகுதியில் நடந்த படையெடுப்பில் எதிர்ப்பாளர்கள் 1,400 பேரை விரட்டியடித்து வெற்றிப் பெற்றார்.
1962, பிப்ரவரி 13: அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி கியூபாவுக்கு எதிராக ஏற்றுமதி தடை விதிக்கும் ஆணை பிறப்பித்தார்.
1962, அக்டோபர்: கியூபாவுக்கு ஆதரவாக சோவியத் யூனியன் ஏவுகணைகளை நிலைநிறுத்தியது. பின்னர் கியூபா மீது படையெடுப்பு இல்லை என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா வழங்கியதும், ஏவுகணைகளை சோவியத் யூனியன் வாபஸ் பெற்றது.
1963 ஏப்ரல்: முதல் முறையாக சோவியத் யூனியன் சென்றார் காஸ்ட்ரோ.
1965: கியூபா கம்யூனிச கட்சியை நிறுவினார் காஸ்ட்ரோ.
1990: சோவியத் யூனியன் உடைந்ததால் கியூபா மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது.
1995: முதல்முறையாக சீனா சென்றார் காஸ்ட்ரோ.
1998: கியூபாவுக்கு வந்த வாடிகன் போப் ஜான் பாலை வரவேற்றார் காஸ்ட்ரோ.
2003, மார்ச்: அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் 75 பேரை கைது செய்வதற்கு காஸ்ட்ரோ உத்தரவு பிறப்பித்தார்.
2006, ஜூலை 31: ஆபத்தான குடல் அறுவை சிகிச்சை காரணமாக தனது பதவியை சகோதரர் ரால் காஸ்ட்ரோவிடம் தற்காலிகமாக ஒப்படைத்தார் காஸ்ட்ரோ. அப்போது அவருக்கு வயது 75.
2006, டிசம்பர் 3: உடல் நலக்குறைவு காரணமாக தனது 80-வது பிறந்த தினத்திலும், கிரான்மா கப்பல் மூலம் கியூபா வந்தடைந்த 50-வது ஆண்டுவிழாவில் பங்கேற்கவில்லை.
2008, பிப்ரவரி: கியூபாவின் அதிபராக ரால் காஸ்ட்ரோ நியமிக்கப்பட்டார்.
2014, டிசம்பர் 17: அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபாவுக்கு வருகை தந்து இரு நாட்டுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
2016, நவம்பர் 25: 90 வயதில் காஸ்ட்ரோ காலமானார். கியூபா கண்ணீரில் மூழ்கியது.

Thursday 24 November 2016

வங்கிகளில் செலுத்தப்படும் கணக்கில் வராத தொகைக்கு 50 சதவீதம் வரி விதிப்பு: மத்திய அரசு முடிவு

காலாவதியான 500, 1000 ரூபாய் தாள்களின் மூலம் வரும் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தப்படும் கணக்கில் வராத தொகைக்கு, 50 சதவீதம் வரி வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜன்தன் கணக்குகளில் இரண்டே வாரங்களில் ரூ.64,250 கோடி செலுத்தப்பட்டது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகை கறுப்புப் பணமாக இருக்கலாம் என மத்திய அரசு சந்தேகிக்கிறது.
இந்நிலையில், ரூ.2.5 லட்சத் துக்கு மேல் செலுத்தப்படும் கணக் கில் வராத தொகைக்கு அதிகப் பட்ச வரி விதிப்பதோடு, 200 சதவீதம் அபராதம் விதிப்பது குறித்து முதலில் பரிசீலிக்கப் பட்டது.
ஆனால், இதற்கு வரித்துறை சட்டங்கள் அனுமதியளிக்காது என்பதால், டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தப்படும் கணக்கில் வராத தொகைக்கு 50 சதவீதம் வரி விதிக்கும் வகை யில் வரிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது.
டெல்லியில் வியாழக்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இச்சட்டத் திருத்தத்துக்கு அமைச் சரவை ஒப்புதல் அளித்துள் ளதாகவும், டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, டிசம்பர் 30-ம் தேதிக்குள் 500, 1000 ரூபாய் தாள் களின் மூலம் வங்கிகளில் செலுத் தப்படும் கணக்கில் வராத தொகைக்கு 50 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படும். வரி பிடித்தம் போக மீதத் தொகையை 4 ஆண்டுகள் வரை வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கவோ, எவ்வித நிதி பரிவர்த்தனை களுக்கும் பயன்படுத்தவோ முடியாது.
கணக்கில் வராத பணம் வரித்துறை அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டால், 90 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதோடு, நீண்ட காலம் பயன்படுத்த முடியாத அளவுக்கு அத்தொகை முடக்கி வைக்கப்படும்.

Wednesday 23 November 2016

தமிழகத்தில் புதிய ரூ.500 நோட்டு விநியோகம்

தமிழகத்தில் புதிய ரூ.500 நோட்டு விநியோகம் தொடங்கியிருக்கிறது. சேலம் முதல் அக்ரஹாரம் கரூர் வைஸ்யா வங்கியில் இன்று (புதன்கிழமை) பிற்பகலில் ரூ.500 நோட்டு விநியோகிக்கப்பட்டது.
இருப்பினும், தமிழகம் முழுவதும் பரவலாக ரூ.500 விநியோகிக்கப்பட்டுள்ளதா என்ற தகவல் இன்னும் கிடைக்கவில்லை.
ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து நாடு முழுவதும் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய ரூ.2000 நோட்டு தரப்பட்டது. பழைய நோட்டுகளை மாற்றிவிட்டாலும் அதற்கு சில்லறை கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். பெரும்பாலான மக்கள் ரூ.2000-க்கு பதிலாக ரூ.500 நோட்டுகளை முதலில் புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்றனர்.
புதிய ரூ.500 நோட்டு

இந்நிலையில், ரூபாய் நோட்டு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையிம்போது, "பாதுகாப்பு காரணங்களால், தமிழகத்துக்கு புதிய 500 ரூபாய் நோட்டு எப்போது வரும் என்பதை நேரடியாக இப்போது தெரிவிக்க முடியாது. வேண்டுமென்றால் அதை ரகசிய அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்" என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் சில்லறை தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், சேலம் முதல் அக்ரஹாரம் கரூர் வைஸ்யா வங்கியில் ரூ.500 நோட்டு விநியோகிக்கப்பட்டது. புதிய ரூ.500 நோட்டை மக்கள் ஆறுதல் அடைந்து ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

ரூபாய் நோட்டு விவகாரம்: இதுவரை ரூ.6 லட்சம் கோடி டெபாசிட்; ரூ.15 லட்சம் கோடி டிபாசிட் ஆகும்!

அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசு அறிவிப்பிற்கு பின், இதுவரை ரூ.6 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் ஆகியுள்ளதாகவும், மேலும் ரூ.15 லட்சம் கோடி டெபாசிட் ஆகும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8-ஆம் தேதி அதிக மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரமதர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இவை அனைத்தையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி, வழக்கு தொடர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க விரும்பவில்லை. பல்வேறு பிரச்னைகள் உள்ளன. மக்கள் தங்களின் பிரச்சனைகளுக்கு சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்கள் மூலம் நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தது. தொடர்ந்து, ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு எடுத்திருக்கும் உரிய நடவடிக்கை என்ன? தற்போது அதன் நிலைமை என்ன? இதுவரை எவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றம் அட்டர்னி ஜெனரலிடம் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்து பேசிய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, வங்கிகளில் இதுவரை ரூ.6 லட்சம் கோடிக்கும் மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ரூ.15 லட்சம் கோடி வரை டெபாசிட் ஆகும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். ரூபாய் நோட்டு விவகாரத்திற்கு பிறகு ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாகவும், மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
கருப்பு பணம் மற்றும் போலி ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதற்காகவே, அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், தற்போதைய நிலைமையை கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் முகுல் கூறினார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணையை டிசம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tuesday 22 November 2016

ரூபாய் நோட்டு நடவடிக்கை: மக்கள் இன்னல்களை விடுத்து பிரதமர் கேட்டுள்ள 10 கேள்விகள்

500 ரூ மற்றும் 1000 ரூ நோட்டுகள் பற்றிய மத்திய அரசின் சமீபத்திய முடிவுக்கு மக்களின் கருத்தை அறிய பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நரேந்திர மோடி செயலியில் உள்ள பத்து கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் மக்கள் தங்கள் கருத்தை சமர்ப்பிக்கலாம். இந்த கருத்துக் கணிப்புக்கான சுட்டியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட மோடி, மக்களிடம் இருந்து நேரடியாக கருத்தை அறிந்து கொள்ள விரும்பியுள்ளார். இந்த 10 கேள்விகளில் ஒரேயொரு கேள்வி மட்டுமே மக்கள் படும் அவதி குறித்து கேட்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அவர் கேட்டுள்ள பத்து கேள்விகள் கீழ்வருமாறு:

1.இந்தியாவில் கருப்புப் பணம் உள்ளது என நினைக்கிறீர்களா? அ) ஆம். ஆ) இல்லை
2.ஊழல் பேயும், கருப்புப் பணமும் ஒழிக்கப்பட வேண்டியன என எண்ணுகிறீர்களா? அ) ஆம். ஆ) இல்லை
3.ஒட்டுமொத்தமாக கருப்புப் பண ஒழிப்பில் அரசின் அணுகுமுறை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
4.ஊழலை ஒழிக்க மோடி அரசின் முயற்சிகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 1 முதல் 5 என்ற அளவீட்டில்- மிகவும் பாராட்டத்தக்கது, மிக நன்று, நன்று, பரவாயில்லை, தேவையில்லாதது என மதிப்பளிக்கவும்.
5. 500ரூ மற்றும் 1000ரூ பழைய நோட்டுகளை ஒழிக்க மோடி அரசு எடுத்த முடிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அ.)சரியான திசையில் செல்லும் மிகச்சரியான முடிவு. ஆ.)நல்ல முடிவு இ.)எந்த பயனும் இருக்காது
6.நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது கருப்புப் பணம், ஊழல், பயங்கரவாதம் ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவும் என நினைக்கிறீர்களா? அ) உடனடியாக உதவும் ஆ.)சில காலம் சென்றோ, நாட்பட்டோ உதவும் இ.)குறைந்தபட்ச உதவிதான் இருக்கும். ஈ) தெரியவில்லை.
7.நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் ரியல் எஸ்டேட், உயர்கல்வி, மருத்துவம் ஆகியன சராசரி மனிதனுக்கு எட்டும் வகையில் விலை குறையும். அ)கண்டிப்பாக ஆ)ஓரளவுக்கு இ)சொல்ல முடியாது
8.ஊழல், கருப்புப்பணம், பயங்கரவாத மற்றும் கள்ள நோட்டுக்கு எதிரான இந்த நடவடிக்கையால் நீங்கள் அனுபவித்த அசிரத்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்களா? அ) நிச்சயம் இல்லை. ஆ)ஓரளவுக்கு. ஆனால் அது என் கடமை. இ.ஆம்
9.ஊழலுக்கு எதிராக போராடியவர்கள் இப்போது கருப்புப் பணம், ஊழல், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக போராடுகிறார்கள் என நம்புகிறீர்களா? அ)ஆம் ஆ)இல்லை

10. இது குறித்து ஏதேனும் ஆலோசனைகளை, எண்ணங்களை பிரதமர் மோடியுடன் பகிர நினைக்கிறீர்களா? 

பழைய 500ரூ மற்றும் 1000ரூ நோட்டுகள் இனி செல்லாது என்ற ஆணை குறித்து பிரதமர் நேரடியாக கேள்விகளை கேட்டுள்ளார். அதுமட்டுமல்லாது இந்த நடவடிக்கையை மேலும் எப்படி வலுப்படுத்துவது என்ற ஆலோசனைகளையும் கேட்டுள்ளார்.

3 தொகுதிகளிலும் முத்தான வெற்றியைப் பெற்றது அதிமுக!

தமிழகத்தில் மூன்று தொகுதிகளிலும் முத்தான வெற்றியைப் பெற்றுள்ளது அதிமுக.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 19-ஆம் தேதியன்று நடந்தது. அவரக்குறிச்சியில் அதிகபட்சமாக 81.86 சதவீதமும், திருப்பரங்குன்றத்தில் 71.04 சதவீதமும், தஞ்சாவூரில் 69.41 சதவீத வாக்குகளும் பதிவாகின.
மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. அவைகள் இன்று 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அரவக்குறிச்சியில் மட்டும் ஒரு மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  
இதில், தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமி அமோக வெற்றி பெற்றார். முதல் முறையாக பேரவை உறுப்பினராக நாராயணசாமி தேர்வாகியுள்ளார்.
அரவக்குறிச்சியில் பதிவான வாக்குகள் கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியிலும் தஞ்சாவூர் தொகுதியில் பதிவானவை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலைக் கல்லூரியிலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் பதிவான வாக்குகள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் வைத்து எண்ணப்பட்டு வந்தன.
மூன்று தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேசைகள் அமைக்கப்பட்டு அதில், அரவக்குறிச்சியில் 18 சுற்றுகளும், தஞ்சாவூரில் 20 சுற்றுகளும், திருப்பரங்குன்றத்தில் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஒவ்வொரு மேசையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.  இதனால், வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கும், வாக்கு எண்ணிக்கையை தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்தே உடனடியாக அறியவதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
வாக்கு எண்ணும் பணியில் 25 பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு மேசையிலும் ஒரு வாக்கு எண்ணும் பணியாளர் தவிர அரசு அல்லது பொதுத்துறை நிறுவனத்தைச் சேர்ந்த நுண் பார்வையாளரும் உடன் இருந்தனர்.
ஒவ்வொரு சுற்றிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் சம்பந்தப்பட்ட கட்சிகள் அல்லது சுயேச்சை வேட்பாளர்களின் முகவர்களுக்கு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, வேட்பாளர் பெற்ற வாக்குகள் சரிபார்க்கப்பட்டு அடுத்த சுற்று தொடங்குவதற்கு முன்பாக வெளியிடப்பட்டு வந்தன.
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள், பிற வாக்கு எண்ணும் பணியாளர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். வாக்கு எண்ணும் செயல்முறைகள் அனைத்தும் விடியோ படம் பிடிக்கப்பட்டு வந்தன.
தஞ்சையில் அதிமுக வெற்றி: தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் ரெங்கசாமி வெற்றி பெற்றார். 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதிச் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 97,855 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 71,402 வாக்குகள் பெற்றார். 26,483 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரெங்கசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
திருப்பரங்குன்றத்திலும் 8வது முறையாக அதிமுக வெற்றி: திருப்பரங்குன்றம் தொகுதியில் 8-வது முறையாக அதிமுக வெற்றி பெற்றுள்ளார். இறுதிச் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். ஏ.கே.போஸ் 1,12,988 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர்.சரவணன் 70,361 வாக்குகள் பெற்றுள்ளார். 42,627 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக 6,453 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கும், தேமுதிக 3,901 வாக்குகள் பெற்று 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி அதிமுக வெற்றி: அரவக்குறிச்சியில் இறுதிச் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 23,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். செந்தில் பாலாஜி 88,068 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.சி பழனிச்சாமி 64,395 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதையடுத்து சட்டப்பேரவையில் ஆளும் அதிமுகவின் பலம் 136 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி: புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் நாராயணசாமி அமோக வெற்றி பெற்றார். 11,144 வாக்குகள் வித்தியாசத்தில் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார். நாராயணசாமி பெற்ற மொத்த வாக்குகள்: 18,709. அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர்- 7565 வாக்குகள் பெற்றார். நோட்டாவில் 334 வாக்குகள் பதிவாகின.

Sunday 20 November 2016

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம் அ.தி.மு.க. தொண்டர்கள் கொண்டாட்டம்

தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் 22-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உடல்நிலையில் முன்னேற்றம்

அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் சிவகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் மற்றும் சிங்கப்பூர் ‘பிசியோ தெரபி’ நிபுணர்கள் மேரி சியாங், சீமா, ஜூடி ஆகியோரும் சிகிச்சை அளித்தனர்.

தொடர் சிகிச்சை காரணமாக அவருடைய உடல்நிலையில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளுக்கும், உடல் அசைவு பயிற்சிகளுக்கும் ஜெயலலிதா முழு ஒத்துழைப்பு அளித்து வந்தார்.

செயற்கை சுவாசம்...

நுரையீரல் தொற்று முழுமையாக அகற்றப்பட்டு அவருக்கு ‘பிசியோ தெரபி’ சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றதை கண்டு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் செயற்கை சுவாசத்தின் அளவு படிபடியாக குறைக்கப்பட்டது. அதே வேளையில் உடல் அசைவு பயிற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

அவர் வழக்கமான உணவுகளை எடுத்து வருவதாகவும், சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார் என்றும் டாக்டர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் செயற்கை சுவாச உதவி இன்றி இயற்கையாக மூச்சு விடுவதற்கு சில பயிற்சிகளை ஜெயலலிதாவுக்கு டாக்டர்கள் அளித்து வந்தனர். அது நல்ல பலனை தந்தது. அதன் தொடர்ச்சியாக பல மணி நேரம் இயல்பாக ஜெயலலிதா மூச்சுவிட்டும், நாற்காலியில் அமர்ந்து இளைப்பாறியும் வந்தார். அவர் இயல்பாக மூச்சுவிடுகிறார் என்றும், சாதாரண உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார் என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

டாக்டர்கள் ஆலோசனை

உலகத்தரமிக்க சிகிச்சை காரணமாக ஜெயலலிதா தினமும் 20 மணி நேரத்துக்கும் மேலாக செயற்கை சுவாசம் எதுவும் இன்றி இயற்கையாகவே சுவாசித்து வந்தார். தூங்கும் நேரத்தில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஜெயலலிதா இயல்பாகவே மூச்சுவிடுகிறார். அவருடைய நுரையீரல் விரிவடைவதற்காக 15 அல்லது 20 நிமிடங்கள் மட்டும் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. அவர் நன்றாக இருக்கிறார். வீடு திரும்புவதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதை கண்ட மருத்துவ குழுவினர் அவருக்கு முழுமையாக செயற்கை சுவாசத்தை அகற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொடர் சிகிச்சை காரணமாக உடல்நிலை தேறி வரும் ஜெயலலிதா எந்த நேரத்திலும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆஸ்பத்திரி வளாகம் முன்பு தொடர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டும் வந்தனர். இந்த நிலையில் அவர் நேற்று மாலை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி நுழைவுவாயில் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்

ஜெயலலிதா சாதாரண தனி வார்டுக்கு மாற்றப்படும் தகவலை அறிவதற்காக அ.தி.மு.க.வினர் ஆஸ்பத்திரி முன்பு ஆவலோடு காத்திருந்தனர். இந்த நிலையில் 59 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஜெயலலிதா மாலை 5.30 மணி அளவில் தான் சிகிச்சை பெறும் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை வார்டில் இருந்து அதே மாடியில் கடைசியில் உள்ள சாதாரண தனி வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த தகவலை அறிந்ததும் ஆஸ்பத்திரி முன்பு காத்திருந்த அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். மகிழ்ச்சி பொங்க அம்மா வாழ்க... என்று ஆடிப்பாடினர். இன்றுடன் அம்மாவுக்கு இருந்த திருஷ்டி அகன்றுவிட்டது என்று கூறி பூசணிக்காயில் சூடம் கொளுத்தி தரையில் உடைத்தனர்.

பின்னர் ஆஸ்பத்திரிக்கு வந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். ஆஸ்பத்திரி நுழைவுவாயில் முன்பு உள்ள விநாயகர் கோவிலில் கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.

சி.ஆர்.சரஸ்வதி பேட்டி

ஜெயலலிதா வார்டு மாற்றப்பட்டது குறித்து அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டிருப்பது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. இதனை வார்த்தைகளால் கூற முடியாது. தமிழக மக்கள் முதல்-அமைச்சரை ஒரு தாயாகவே பார்த்து வருகிறார்கள். அந்த தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட தொடர் பிரார்த்தனைகள் நடத்தினர். பல நாட்களுக்கு பிறகு இந்த சந்தோஷ தகவல் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. ஓய்வு என்பது எனக்கு தெரியாது என்று அம்மா கூறியது போல், அவர் மீண்டும் செயல்பட இருக்கிறார். சொன்னதை செய்பவர் அம்மா என்பது அனைவருக்கும் தெரியும். உண்மையிலேயே தெய்வத்தின் அருளால் அவர் மறுபிறவி எடுத்துவிட்டார்.

அவர் சிகிச்சையில் இருந்த 59 நாட்களும் நாங்கள் அவர் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி முன்பே காத்து கிடந்து வேண்டி வருகிறோம். அவர் பூரண உடல் நலம் பெற்று இன்றைய தினம் சாதாரண வார்டுக்கு மாறி இருக்கும் இந்த தருணம் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி. அம்மா வீடு திரும்பும் நாளுக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கி லாக்கர்களை முடக்கும் திட்டம் இல்லை: மத்திய நிதி அமைச்சகம் உறுதி

வங்கி லாக்கர்களை முடக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசுக்குக் கிடையாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவதற்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதன் அடுத்த கட்டமாக வங்கிகளின் லாக்கர்கள் சீல் வைக்கும் திட்டம் அரசிடம் இருப்பதாக வதந்தி வெளியானது. அத்துடன் லாக்கர்களில் உள்ள தங்க நகைகளைக் கைப்பற்றும் யோசனையும் இருப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில் அத்தகைய யோசனை ஏதும் மத்திய அரசுக்கு இல்லை என நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் பதிவில் தெளிவுபடுத்தியுள்ளது.
புதிதாக அச்சிடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டில் சாயம் போவதாக வெளியான தகவலையும் நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. புதிய நோட்டில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளது. இன்டாக் லியோ எனப்படும் புடைப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
நல்ல நோட்டு என்பதைக் கண்டுபிடிக்க ஒரு துணியின் மீது ரூபாய் நோட்டைத் தேய்த்தால் சிறிதளவு மின்சாரம் பாய்வதைப் போன்ற உணர்வு ஏற்படும். இது தாளில் உள்ள நிறம் துணிக்கு மாறுவதால் ஏற்படுவதாகும் என்று நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் மோடி ஆலோசனை
இதனிடையே நிலைமையின் தீவிரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவை சகாக்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு களை சமாளிக்கும் விதம் மற்றும் பொதுமக்களை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Saturday 19 November 2016

ஊழல் புகார்: மலேசிய பிரதமர் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் கார்டியன்

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கோலாலம்பூரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு நிதியில் இருந்து நஜீப் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்குகளுக்கு 70 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 4,600 கோடி) மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ரசாக் மறுத்தபோதிலும் மலேசியாவில் அவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வந்தது.
இந்த நிலையில், ரசாக் பதவி விலக வலியுறுத்தி போராட்டக்காரர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சிறுவர் சிறுமியர் எனப் பலரும் மஞ்சள் நிற ஆடை அணிந்து இன்று (சனிக்கிழமை) தலைநகர் கோலாலம்பூரில் திரண்டு பிரதமருக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த 'பெர்சிக்' அமைப்பின் முக்கிய உறுப்பினர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த 7,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் குறித்து 'பெர்சிக்' அமைப்பின் துணைத் தலைவர் ஷருல் அமன் ஷாரி பேசும்போது, "நாங்கள் எங்களது நாட்டை அவமதிக்க இங்கு கூடவில்லை. நாங்கள் எங்கள் நாட்டை மிகவும் நேசிக்கிறோம். எங்கள் நாட்டை வலுமையாக்கவே இங்கு திரண்டிருக்கிறோம்" என்றார்.
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் பதவிவிலகக் கோரி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே அந்நாட்டில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை, மதுரை, அரவக்குறிச்சி, நெல்லித்தோப்பு தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக் குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு சில செய்தித் துளிகள்:
* தமிழகத்தில் 3 தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது.
அரவக்குறிச்சியில் 81.92%, தஞ்சாவூரில் 69.02%, திருப்பரங்குன்றத்தில் 70.19% வாக்குகள் பதிவாகி உள்ளன. புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியில் 85.52% வாக்கு பதிவாகியுள்ளது.
* 3 மணி நிலவரப்படி அரவக்குறிச்சியில் 73.29%, தஞ்சாவூரில் 60.54%, திருப்பரங்குன்றத்தில் 62% வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 76% வாக்குப்பதிவாகியுள்ளது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் கூறி அதிமுக வேட்பாளர் ஓம் சக்தி சேகர் தலைமையிலான அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
* இந்திய தேர்தல் ஆணையம் சர்வீஸ் வாக்காளர்களுக்கு (ராணுவம் மற்றும் துணை ராணு வத்தில் பணியாற்றுபவர்கள்) மின்னஞ்சல் மூலமாக வாக்குச் சீட்டை அனுப்பும் ஆன்லைன் வாக்குப்பதிவு முறையை நாட்டிலேயே முதல்முறையாக நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் அறிமுகம் செய்துள்ளது.
மதியம் 1 மணி நிலவரப்படி அரவக்குறிச்சியில் 61.98%, தஞ்சாவூரில் 50.05%, திருப்பரங்குன்றத்தில் 52.29% வாக்குகள் பதிவாகியுள்ளது.
* காலை 11 மணி நிலவரப்படி அரவக்குறிச்சியில் 43.10%, தஞ்சாவூரில் 34.21%, திருப்பரங்குன்றத்தில் 36.01% வாக்குகள் பதிவாகின.
* காலை 9 மணி நிலவரப்படி திருப்பரங்குன்றம் தொகுதியில் 15% வாக்குப்பதிவானது, அரவக்குறிச்சியில் 21%, தஞ்சையில் 15%, நெலித்தோப்பில் 15% வாக்குப்பதிவானது.
நெல்லித்தோப்பு சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன் என நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
அரவக்குறிச்சி மலைக்கோவிலூர் வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு அரை மணி நேரம் தடைபட்டது.
திருப்பரங்குன்றத்தில் 2 வாக்குச்சாவடிகளில் சரியாக இயங்காத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வேறு இயந்திரங்கள் வைக்கப்பட்டன.
திருப்பரங்குன்றத்தில் 291 வாக்குச்சாவடிகளிலும் எவ்வித தாமதமும் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கியதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 8 மணி நிலவரப்படி 8% வாக்குபதிவாகியிருந்தது
அரவக்குறிச்சியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பள்ளப்பட்டியில் பெருமளவில் முஸ்லிம் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
பண விநியோகம் காரணமாக ரத்து:
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது, அதிக அளவில் பணம் விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக, தேர்தல் ஆணையத் தால் தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் இன்று (நவ.19) நடைபெறுகிறது.
தஞ்சாவூர் தொகுதியில் 14 வேட்பாளர்களும், அரவக்குறிச்சி தொகுதியில் 39 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். திருப்பரங் குன்றம் தொகுதி எம்எல்ஏ சீனிவேல் மரணம் அடைந்ததால் அத்தொகு திக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பாதுகாப்பு:
தஞ்சாவூர் தொகுதியில் 88 வாக்குப்பதிவு மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட் டுள்ளன. இதில், 24 மையங்களில் உள்ள 48 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப் பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள 245 வாக்குச் சாவடி மையங்களில் 67 பதற்றமான வையாக கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில், தற்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நுண் பார்வையாளர்கள் நியமிக் கப்பட்டு, வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது.
ஏதேனும் அசம்பாவித நிகழ்வுகள் ஏற்பட்டால் அந்தப் பகுதிகளுக்கு விரைந்து செல்வ தற்காக மத்திய பாதுகாப்புப் படையினரைக் கொண்ட 13 அதிவிரைவுப் படைகள் ஏற்படுத் தப்பட்டுள்ளன.
இதுதவிர இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 50 அதிரடிப்படை, டிஎஸ்பிக்கள் தலை மையில் 20 அதிரடிப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் தொகுதி யில் 291 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 1,396 பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணிக்கு 5 துணை ராணுவப் படை யினர், 1,773 போலீஸார் தொகுதி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லித்தோப்பு
புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடை பெறுகிறது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டி யிடாத நாராயணசாமி புதுச்சேரியில் முதல்வரானார். அவர் இதில் போட்டியிடுகிறார்.
தொகுதியில் உள்ள 26 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என அறிவிக் கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் வி.நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்திசேகர், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஆறுமுகம் (எ) சரவணனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவி அண்ணாமலை மற்றும் 4 சுயேச்சைகள் என 8 பேர் களத்தில் உள்ளனர்.