திருவாரூர் மாவட்டத்தில் மழை தணிந்ததால் புதன்கிழமை இயல்புநிலை திரும்பியது. விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நிகழாண்டு 81,467 ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 38,000 ஏக்கரில் இயல்பான நடவு முறையிலும், 1,65,590 ஏக்கரில் நேரடி விதைப்பு முறையிலும் என மொத்தம் 2,85,057 ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 29-ஆம் தேதி முதல் தொடர்ந்து பெய்த மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மழை நீரில் மூழ்கின. நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. மனித உயிரிழப்பும், கால்நடைகள் இழப்பும் ஏற்பட்டன.
இதனால், விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், புதன்கிழமை காலை முதல் மழையின் தீவிரம் சற்று தணியத் தொடங்கியது.
இதனால், கடந்த சில நாள்களாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த மக்கள் வெளியில் நடமாடத் தொடங்கினர். நிலத்தில் தேங்கிய மழைநீர் வடியத் தொடங்கியதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். மாவட்டம் முமுழுவதும் இயல்புநிலை திரும்பியது.
மழையளவு: புதன்கிழமை காலை 8.30 ம மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக முத்துப்பேட்டையில் 78.86 மில்லி மீட்டர் மழை பதிவானது. திருத்துறைப்பூண்டியில் 78, மன்னார்குடியில் 45, குடவாசல் 26.1, பாண்டவையாறு தலைப்பு 23, திருவாரூர் 21.4, நன்னிலம் 17.4, நீடாமங்கலம் 16.8, வலங்கைமான் 15.1 மில்லிமீட்டர் மழை பதிவானது.
No comments:
Post a Comment