தமிழகம் முழுவதும் அனைத்து வகையான மின் நுகர்வோருக்கும் 15 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த மின் கட்டண உயர்வு இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2 மாதத்துக்கு 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கான கட்டண உயர்வை அரசே ஏற்கும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு:
மின் இணைப்பு நுகர்வோர், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள், எதிர்ப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அனைத்து வகைமின் இணைப்பு தாரர்களுக்கும் 15 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு டிசம்பர் 12 (இன்று) முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பின்படி, வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு 100 யூனிட் வரை பயன்படுத்து வோருக்கு தற்போதுள்ள கட்டணம் ரூ.2.60-ல் இருந்து ரூ.3 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு 200 யூனிட் பயன்படுத்துவோருக்கு ரூ.2.80-ல் இருந்து ரூ.3.25 ஆகவும், 201 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ.4.-ல் இருந்து ரூ.4.60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 500 யூனிட்டுக்கு மேல் இரு மாதங்களுக்கு பயன்படுத்து வோருக்கு ரூ.5.75-ல் இருந்து ரூ.6.60ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வுமூலம் ஆண்டுக்கு மின் வாரியத்துக்கு ரூ.3,400 கோடி அதிகமான வருவாய் கிடைக்கும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
500 யூனிட் வரை கட்டண உயர்வு இல்லை
முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மின் நுகர்வோருக்கான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எப்படி நிர்ணயத்தாலும், அதன் காரணமாக ஏழை எளிய மக்கள் எந்த விதத்திலும் பாதிக்காத விதத்தில் அதற்கு தேவைப்படும் கூடுதல் மானியத்தை தமிழக அரசே தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி 2 மாதங்களில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர் எவருக்கும் எந்த வித கூடுதல் சுமையும் இல்லாத வகையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதாவது இரண்டு மாதங்களில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்கள் தற்போது அவர்கள் செலுத்தி வரும் மின் கட்டணத்தையே தொடர்ந்து செலுத்தினால் போதும்.
இதன் காரணமாக தமிழ்நாடு அரசுக்கு ரூ.825.90 கோடி கூடுதல் நிதி சுமை ஏற்படும். இதனால் 1 கோடியே 61 லட்சத்து 21 ஆயிரம் வீட்டு மின் இணைப்பு நுகர்வோர் பயன்பெறுவர். வீட்டு மின் இணைப்பு நுகர்வோருக்கென இனி தமிழ்நாடு அரசு ஆண்டொன்றுக்கு 2,714 கோடியே 3 லட்சம் ரூபாய் மானியமாக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வழங்கும். மொத்த வீட்டு மின் நுகர்வோர்களில், 94 சதவீதம் வீட்டு மின் நுகர்வோருக்கு எந்தவித கட்டண உயர்வும் இருக்காது.
சுமார் 11 லட்சத்து 83 ஆயிரம் குடிசை மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் ஏதுமின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது. அது தொடர்ந்து வழங்கப்படும்.
கைத்தறி நெசவாளர்களைப் பொறுத்த வரை, தற்போது 2 மாதங்களுக்கு ஒரு முறை 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டணம் ஏதுமில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கு வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கான மின் கட்டண விகிதத்தில் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே, தற்போதும் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
2 மாதத்துக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் எதுவுமின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் செலுத்த வேண்டிய முழு மின் கட்டணத்தையும் அரசே ஏற்று வருகின்றது.
இவர்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் தற்போது உயர்த்தப்பட்ட கட்டணத்தையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும். எனவே, 2 மாதத்துக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் எதுவுமின்றி மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர் எந்தவித கூடுதல் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. அதுபோன்றே, குடிசை மின் நுகர்வோரும் எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. அதே போல், விவசாய மின் இணைப்பு பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் விசைத்தறி மின் நுகர்வோர் ஆகியோருக்கு எந்த வித கட்டணமும் இன்றி மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். 2 மாதங்களுக்கு 100 யூனிட் வரை பயன்படுத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
அதற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கு வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு வழங்கப்படும் மின் கட்டண மானியம் தொடர்ந்து வழங்கப்படும். எனவே, 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கு எந்தவித கட்டண உயர்வும் இல்லை.
மின் கட்டண உயர்விலிருந்து ஏழை, எளிய, நடுத்தரப் பிரிவு மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கூடுதலாக ரூ. 1,310.23 கோடி மானியம் வழங்கும். இதன் மூலம் ஆண்டொன்றுக்கு 6 ஆயிரத்து 295 கோடியே 32 லட்சம் ரூபாய் மானியம் வழங்கும்.
வீடுகளுக்கு (2 மாதத்துக்கு)
200 யூனிட்கள் வரை ரூ.20ல் இருந்து ரூ.30 ஆகவும், 500 யூனிட்கள் வரை ரூ.30ல் இருந்து ரூ.40 ஆகவும் , 500 யூனிட்களுக்கு மேல் ரூ.40ல் இருந்து ரூ.50 ஆகவும் நிலைக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.